திமுக எம்எல்ஏ பிரபாகரன், காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி
பெரம்பலூர் சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏவான பிரபாகரனுக்கும் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி: பெரம்பலூர் சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏவான பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போல அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ எஸ்டி ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு பல மாதங்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இருப்பினும், ஓமிக்ரான் கண்டறியப்பட்ட பின்னர் டிசம்பர் மாத கடைசியில் இருந்து தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் கூடி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,728 பேர் கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 121 ஆக உள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் மாநில அரசு செயலாற்றி கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இதனால் தமிழக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்றைய தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதேபோல செய்தியாளர்கள் மற்றும் அவை ஊழியர்களுக்குச் சென்னை தலைமைச் செயலகத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பெரம்பலூர் சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏவான பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக திமுக எம்எல்ஏ பிரபாகரன் திருச்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ராமச்சந்திரன் தனது முகநூல் பக்கத்தில், சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நாளை தொடங்க உள்ளதையொட்டி மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே என்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளேன். எனவே என்னோடு அருகிலும், தொடர்பிலும் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சட்டசபைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications