உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி? திமுகவுடன் பேசி முடிவெடுப்போம்! முத்தரசன் நம்பிக்கை!
திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது பற்றி திமுகவுடன் சுமூகமாக பேசி முடிவெடுப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லரசின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது;

தேர்தல் வாக்குறுதி
''தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். தமிழக அரசு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் அமைச்சர்கள் ரவுடித்தனங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒன்றிய அரசு சர்வாதிகார பாஸிச அரசாக இருப்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.''

கர்நாடக அரசு
''ஒன்றிய அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை கண்டித்து பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்த உள்ளார்கள். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கும். ஒகேனக்கல் 2 வது கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு அனுமதிக்க மாட்டோம் என கூறுவது மனிததன்மையற்றது.''

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விவகாரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் அரசுக்கு ஆதரவாக இருப்போம் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த பிரச்சினை மட்டுமல்ல அனைத்து பிரச்சனைகளையும் கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கலாம்.

படகுகள் ஏலம்
''இலங்கைக்கு நிதி உதவிகள் அளிக்கும் இந்திய அரசு மீனவர்கள் விவகாரம் தொடர்பாக அவர்களை கண்டிக்க மறுக்கிறார்கள்.
சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க வக்கற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது. அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். படகுகள் ஏலம் விடுவதை தடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

அரசியல் ஆதாயம்
''தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள் தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளை தங்கள் கட்சியில் பா.ஜ.க வின்ர் இணைத்து வருகிறார்கள்.''

தமிழக பாஜக
''எத்தனை மதங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் அதை அழிக்க தான் பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது.
தமிழகத்தில் மதவாத அரசியல் வெற்றி பெறாது.தமிழகத்தில் நீட் தேர்வினால் 25 மாணவிகள் உயிரிழந்துள்ளார்கள் அது குறித்தெல்லாம் அண்ணாமலையின் நிலைப்பாடு என்ன? தமிழக பா.ஜ.க வினர் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா அல்லது ஒருவருக்கொருவர் மோதி கொள்ள வேண்டும் என விரும்புகிறார்களா என்பதை விளக்க வேண்டும்.''












Click it and Unblock the Notifications