திருச்சியில் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை! இடப்பங்கீட்டில் இழுபறி! காங்கிரசிடம் திமுக கறார்!
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்பதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உறுதியாக இருக்கிறாராம்.
இதனால் நேற்று 3 மணி நேரமாக நடைபெற்ற இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லையாம்.
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளிலும், தோழமைக் கட்சிகளுடனான இடப்பங்கீடு விவகாரத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழு திமுக மாவட்டச் செயலாளர்களிடம் பேசி காங்கிரஸ் போட்டியிடும் வார்டுகளை இறுதி செய்கிறது.

4 வார்டுகள்
அந்த வகையில் திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ள நிலையில் காங்கிரஸ் 12 வார்டுகளை கேட்டு வருகிறது. ஆனால் திமுக தரப்பிலோ 4 வார்டுகள் வரை மட்டுமே கொடுக்க முன் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 65 வார்டுகளில் 15 வார்டுகள் வரை கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு 50 வார்டுகளில் திமுகவே நேரடியாக களம் காணும் திட்டத்தில் இருக்கிறது.

நேரு மறுப்பு
இதனால் காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கையில் வார்டுகளை ஒதுக்க திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மறுத்துவிட்டார். சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இடப்பங்கீடு தொடர்பாக திமுக காங்கிரஸ் இடையே திருச்சியில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

தலா 2 வார்டுகள்
இதனிடையே மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஆகிய கட்சிகளுக்கு திருச்சி மாநகராட்சியில் தலா 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும், மனிதநேய மக்கள் கட்சிக்கும் தலா 1 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் திமுக 5 வார்டுகள் வரை மட்டுமே திருச்சி மாநகராட்சியில் கொடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications