ஸ்டாலினுக்காக திருச்சிக்கு ஓடோடி வந்த நடிகர் பிரபு! புகைப்படக் கண்காட்சிக்கு நடிகர்கள் புரோமோஷன்!
திருச்சி: திருச்சியில் திமுக சார்பில் ஒரு வார காலம் நடத்தப்படும் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரபு தொடங்கி வைத்தார்.
திருச்சியில் நடத்தப்படும் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை யாரை வைத்து தொடங்கி வைக்கலாம் என ஆலோசனை நடைபெற்ற போது திருச்சி மண்ணின் மைந்தரும், நடிகருமான சிவகார்த்திகேயன் பெயரும் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அமைச்சர் நேரு தான் நடிகர் பிரபுவை அழைத்து புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைக்க விரும்பி அவரை அழைத்திருக்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்ற மறுப்பு ஏதும் சொல்லாத நடிகர் பிரபு, கண்காட்சியை தொடங்கி வைத்ததோடு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்று ஆர அமர எல்லா படங்களையும் பார்த்த பின்னரே புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
புகைப்படக் கண்காட்சி நடைபெறும் ஒரு வார காலமும் தினமும் சினிமா பிரபலங்களும், சின்னத்திரை நடிகர் நடிகைகளும் இந்தக் கண்காட்சிக்கு வருகை தரவுள்ளார்கள்.

அமைச்சர்களும், திமுக மாவட்டச் செயலாளர்களும் தாங்கள் நடத்தும் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை புரோமோஷன் செய்ய நடிகர்களை கையில் எடுத்திருக்கிறார்கள்.
இதற்கு முன்னதாக சென்னையில் கமல்ஹாசனும், மதுரையில் நடிகர் வடிவேலுவும், கோவையில் நடிகர் சத்யராஜூம் , ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியில் இதுவரை யாரும் பார்த்திராத ஸ்டாலினின் பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம் அவரது அரசியல் பயணம், கடந்து வந்த பாதைகள் பற்றி எளிதாக மக்கள் அறிந்துகொள்வார்கள் என்பதால் இந்தக் கண்காட்சியை ஒவ்வொரு மாவட்டமாக நடத்தி வருகிறது திமுக.
சென்னை, மதுரை, கோவை, திருச்சியை தொடர்ந்து சேலம், வேலூர், விழுப்புரம், நெல்லை என வரிசையாக இந்த புகைப்படக் கண்காட்சிகள் நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications