காலேஜ்ல டான் பட ஹீரோ மாதிரி நான்! எங்கப்பா படிக்க வேண்டாம்ணு சொல்லிட்டார்! கே.என்.நேரு கலகல!
திருச்சி: கல்லூரிக் காலத்தில் டான் படத்தில் வரும் ஹீரோ மாதிரி தாம் இருந்ததாகவும், வசதியான குடும்பம் என்பதால் தன்னை படிக்க வேண்டாம் என்று தனது தந்தை சொல்லிவிட்டார் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார்.
''தயவு செய்து வேறு கல்லூரிக்கு போய்விடுப்பா'' என்று கூறி இரண்டு கல்லூரிகளில் தனக்கு சீட் மறுக்கப்பட்ட நிகழ்வையும் அவர் நினைவு கூர்ந்தார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
அவர் ஆற்றிய உரையின் தொகுப்பு பின்வருமாறு;
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்..நேரு ஸ்டேடியம்? தேதி குறித்த எடப்பாடி & கோ..! உற்சாக ர.ர.கள்!
மோட்டார் சைக்கிள்
''நான் அந்தக் காலத்துலயே மோட்டார் சைக்கிளில் தான் காலேஜுக்கு வருவேன். இப்ப டான்னுன்னு ஒரு படம் பார்த்தேன். அதுல வர ஹீரோ மாதிரி தான் நான் இருப்பேன். கிளாஸ்ல எப்போதும் கடைசி பெஞ்ச் தான். எங்க குடும்பம் வசதி வாய்ப்பா இருந்ததால் எங்கப்பா என்னை படிக்க வேண்டாம்ணு சொல்லி தொழிலை கவனிக்கச் சொன்னார். நான் படிக்காததால் நிறைய அவமானப்பட்டிருக்கேன். இப்போது தான் படிப்பின் அருமை தெரியுது.''
ஆங்கிலத்தில் பேச்சு
''ஒரு முறை கலைஞர், பொன்முடி, நான் என மூன்று பேரும் ஒரு அதிகாரியை சந்தித்தோம். அவர் இங்கிலீஷ்ல தான் பேசுறாரு, அப்ப என்னால எதுவும் பேச முடியல. பொன்முடி தான் அந்த இடத்தில் பேசினார். அதனால் நீங்கள் எல்லாம் நல்லா படிங்க. திருச்சியை பொறுத்தவரை செயிண்ட் ஜோசப் கல்லூரி, நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, இந்த மூன்றும் தான் டாப். இதுல ஜோசப் காலேஜ்ல சேர்ந்தால் படித்து மாள முடியாது. படிபடின்னு சொல்வாங்க. ஜமால் முகமது கல்லூரியில் தான் ஜாலியாக இருக்கும். அதனால் தான் இதுக்கு பெயரே ஜாலி ஜமால் என்று பெயர் வந்தது.''
சீட் கிடையாது
''கல்லூரி படிப்பை முழுமையாக முடித்து இந்தக் கல்லூரியில் நான் சான்றிதழ் வாங்காவிட்டாலும் கூட தேர்தலில் வெற்றிச் சான்றிதழை இந்த ஜமால் முகமது கல்லூரியில் தான் ஒவ்வொரு முறையும் வாங்குகிறேன். இன்னொன்னு சொல்றேன் கேளுங்க, எப்பல்லா ஜமால் காலேஜ்ல ஓட்டு எண்ணப்படுகிறதோ அப்பல்லாம் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். நேஷனல் கல்லூரி முதல்வரும், புத்தனம்பட்டி கல்லூரி முதல்வரும் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து நின்று தயவு செய்து வேறு கல்லூரிக்கு போய்விடுப்பா என்று கூறி எனக்கு சீட் கொடுக்க மறுத்தார்கள்.''
Recommended Video
ஜமால் கல்லூரி
''கடைசியில எனக்கு ஜமால் முகமது கல்லூரி தான் சீட் கொடுத்தது. எனக்கு பேசத் தெரியாது ஆனால் காரியத்தை செய்து கொடுக்கத் தெரியும். ஒரு முறை 10 அமைச்சர்கள் நின்று கொண்டிருந்த போது எல்லோரையும் அழைத்து முரசொலி படிச்சியா என கலைஞர் கேட்டுக்கொண்டே வந்தார். என்னை மட்டும் அவர் கேட்கவில்லை. அவருக்கு தெரியும் யாருக்கு என்ன வேலை தெரியும், தெரியாது என்று'' என தனது பழைய நினைவலைகளை கலகலப்பாக பேசி கல்லூரிக் கால நினைவுகளில் மூழ்கினார்.