அன்று நிழலாக.. மூளையாக.. இன்று சிலையாக...தம்பி ராமஜெயத்தை நினைத்து கண் கலங்கிய அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி: தனக்கு எல்லாமுமாக இருந்த தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரது 60-வது பிறந்தநாளான நேற்று அவரை நினைத்து கண் கலங்கியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கே.என்.ராமஜெயம் சிலைக்கு, அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது தம்பியின் சிலையை ஒரு கணம் உற்று நோக்கிய அமைச்சர் கே.என்.நேரு, பழைய நினைவலைகளை சுமந்தபடி அங்கிருந்து சென்றிருக்கிறார்.

எம்.டி. என்று அழைப்பு
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் நிழலாக, மூளையாக செயல்பட்டவர் தான் அவரது தம்பி கே.என்.ராமஜெயம். கட்சிக்காரர்களால் எம்.டி. என்றழைக்கப்பட்ட இவர் கடந்த 2011-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவரது இழப்பை அமைச்சர் கே.என்.நேருவால் இன்று வரை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு அவருக்கு எல்லாமுமாக திகழ்ந்தார் தம்பி ராமஜெயம்.

ஆலோசகர்
கே.என்.நேரு கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கான ஆலோசகராகவும் விளங்கினார் கே.என்.ராமஜெயம். முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் ராமஜெயத்திடம் கலந்துபேசிய பிறகு தான் நேரு எடுப்பார். இவர் உயிருடன் இருந்தபோது ஷெட்டில் காக் விளையாடுவது வழக்கம். அவ்வாறு அவர் விளையாட காலை 7 மணிக்கு செல்கிறார் என்றால் அதற்கு முன்னதாகவே அவரை காண நூற்றுக்கணக்கான திமுகவினர் அங்கு திரண்டு நிற்பார்கள்.

காரியம் நடக்கும்
நேருவிடம் கேட்பதை விட ராமஜெயத்திடம் கேட்டால் தான் காரியம் நடக்கும் என்ற நிலை அன்று இருந்தது. இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு காலை நடைபயிற்சிக்கு சென்ற கே.என்.ராமஜெயம் சடலமாக தான் மீட்கப்பட்டார். கொலை என்றால் சாதாரண கொலையல்ல, சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினருக்கு மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

மணி விழா
இந்நிலையில் தம்பி ராமஜெயத்தின் 60-வது பிறந்தநாளான நேற்று, மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய் காணப்பட்டிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. மணி விழா கொண்டாட வேண்டிய தம்பி உயிருடன் இல்லை என்பதை நினைத்து நேரு கண் கலங்கவும் செய்திருக்கிறார். இதனிடையே ராமஜெயம் சிலைக்கு மரியாதை செலுத்த, அவரால் பலன் அடைந்தவர்கள் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications