திருச்சி பசுமை பண்ணை கடைகளில் விற்றுத் தீர்ந்த வெங்காயம் - பொதுமக்கள் ஏமாற்றம்
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் 14 பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 45க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருச்சி: 2 டன் பெரிய வெங்காயம் திருச்சியில் உள்ள பசுமை பண்ணை கடைகளில் ஒரே நாளில் விற்றுத்தீர்ந்துள்ளது. இன்று கடைக்கு வெங்காயம் வாங்கப்போனவர்கள் ஏமாற்றமடைந்தனர். திருச்சிக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான 20 டன் வெங்காயத்தை அனுப்பக் கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சுப்பிரமணியபுரம், கருமண்டபம், கல்லுக்குழி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட 14 இடங்களில் உள்ள கூட்டுறவு பண்ணை பசுமை அங்காடிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 45 ரூபாய்க்கு நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை தொடங்கிய சில மணிநேரத்தில் இருப்பில் இருந்த அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதால் இன்று கடைக்கு போன பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக சின்ன, பெரிய வெங்காயங்களின் விலை உச்சத்தில் உள்ளது. இரண்டு ரகங்களுமே கிலோ ரூ.100-க்கு மேல் விலை உயா்ந்தது. திருச்சி மொத்த வியாபார வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம் முதல் ரகம் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, இரண்டாவது ரகம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கடந்த சில நாள்களாக வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவில்லை. இதனால் வெங்காய விலை தொடா்ந்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெங்காயம் கிலோ ரூ. 100 முதல் ரூ. 140 வரை விற்கப்படுகிறது.
பல்லாரி வெங்காயம் முதல் ரகம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, பெரியவெங்காயம் வெங்காயம் 2வது ரகம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்னிந்தியாவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரம், கா்நாடக மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக சந்தைகளில் வரத்து குறைந்துள்ளதால் இந்த திடீா் விலை உயா்வு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
திருச்சி வெங்காயம் மண்டிக்கு திருச்சி மட்டுமல்லாமல் அருகில் உள்ள புதுக்கோட்டை, அரியலூர் ,பெரம்பலூர், கரூர் ,உள்ளிட்ட மொத்த வியாபாரிகள் இங்கு வந்து வெங்காயத்தை வாங்கி செல்வார்கள் தற்போது திருச்சி மொத்த வெங்காய மண்டிக்கு நாள்தோறும் நாள்தோறும் 15 டன் வெங்காயம் வரும் ஆனால் தற்போது 3 டன் வெங்காயம் மட்டுமே வருவதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் கூட்டுறவுப் பண்ணை பசுமைக் காய்கனிக் கடைகள் மூலம் பெரிய வெங்காயமானது கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
திருச்சி மாநகரப் பகுதியில் சுப்பிரமணியபுரம், அமராவதி கூட்டுறவுத் தலைமை விற்பனை நிலையம், சிந்தாமணி, கருமண்டபம், ஸ்ரீரங்கம், ரெங்காநகா், கல்லுக்குழி, சங்கிலியாண்டபுரம், அருளானந்தபுரம், திருவானைக்கா, யாத்ரி நிவாஸ், மங்கம்மாள் சாலை, அம்மா மண்டபம் ஆகிய இடங்களில் இயங்கும் 14 பண்ணை பசுமைக் கடைகளில் வியாழக்கிழமை முதல் பெரிய வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
முதல் நாளாக கொள்முதல் செய்யப்பட்டு 14 கடைகளிலும் விநியோகிக்கப்பட்ட 2 டன் பெரிய வெங்காயம் பிற்பகலுக்குள்ளாகவே விற்றுத் தீா்ந்தது. இதையடுத்து திருச்சிக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான 20 டன் வெங்காயத்தை அனுப்பக் கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
20 டன் வெங்காயம் வந்தவுடன் 14 கடைகள் மட்டுமின்றி, நியாய விலைக் கடைகள், நகரும் விற்பனைக் கடைகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பெரிய வெங்காயம் வழங்க திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, திருச்சி மாநகரின் தேவைக்கு 20 டன் வேண்டும் என்று கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகத்தில் கேட்கப்பட்டுள்ளது. இது இன்றைக்குள் திருச்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெங்காயம் வந்தால், பண்ணை பசுமை அங்காடி மட்டுமின்றி ரேசன் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு கூறியுள்ளார்.