ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கொலையாளியை காட்டிக் கொடுத்த சிசிடிவி!
திருச்சி: சுங்கச்சாவடியில் பதிவான சிசிடிவி காட்சிகளில் முக்கிய துப்பு துலங்கியுள்ளதால் போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 10 ஆண்டு காலமாக கொலையாளிகள் யார் என்று நெருங்கவே முடியவில்லை.
ராமஜெயம் கொலை வழக்கு.. ரூ 50 லட்சம் சன்மான போஸ்டரை சிவகங்கையில் ஒட்டும் சிபிசிஐடி போலீஸ்
சிறப்பு புலனாய்வுக் குழு
ராமஜெயம் கொலை வழக்கை தற்போது காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. அதில் கடந்த மாதம் விசாரணையை துவங்கிய தனிப்படை பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனா். இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறப்பு புலனாய்வு குழு தங்கள் தரப்பில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். அவா்களின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற ஜூன் 10ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
ராமஜெயம் கொலை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி ஜெயக்குமார், ராமஜெயம் கொலை வழக்கில் ஏற்கனவே விசாரணை மேற்கொண்ட 6 அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமஜெயம் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளபட்டது. ராமஜெயம் சகோதரர் அமைச்சர் நேருவிடம் இரண்டு முறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
போன் எண்கள்
இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். இவ்வழக்கை துப்பு துலக்க சரியான தகவலை தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பண வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு சில போன் நம்பர்களும் மெயில் ஐடியும் குறிப்பிடப்பட்டுளது.
சுங்கச் சாவடி
இந்த நிலையில் சுங்கச்சாவடியில் சிசிடிவி கேமராக்களில் குறிப்பிட்ட ஒரு காரில் கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த காரை கண்டறிந்தால் கொலையாளியை நெருங்கிவிடலாம் என்பதால் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இந்த கொலை நடந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் காரை பயன்படுத்திய உரிமையாளர்கள் குறித்த தகவல்களையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து சிபிசிஐடி போலீஸார் சேகரித்து வைத்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு உரிமையாளர்களின் வீடுகளுக்கும் சென்று சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கார் திருட்டு
இந்த கார்கள் திருடுபோயுள்ளதா இல்லை யாருக்கேனும் விற்கப்பட்டதா என விசாரணை நடத்தியதில் ஈரோட்டில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் கார்களை 2012 ஆம் ஆண்டு 70 க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை 60 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டது. எனவே மீதமுள்ள 40 சதவீத உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினால் கொலையாளி குறித்து ஏதேனும் தகவல் கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.