ஆதரவற்றோருக்கு அரவணைப்பு... கருணையுடன் உதவிக்கரம் நீட்டும் திருச்சி பெண் வழக்கறிஞர்
திருச்சி: திருச்சியில் ஆதரவற்ற நிலையில் சாலையோரங்களில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் இரவல் பெறுவோரை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்து வருகிறார் பெண் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஜெயந்தி ராணி.
திருச்சியை பொறுத்தவரை தமிழகத்தின் மத்திய பகுதியாக திகழ்வதால் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய ஊர்களில் ஒன்றாக திகழ்கிறது. அங்குள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம், பெரிய கடைவீதி, அரசு மருத்துவமனை, உள்ளிட்ட பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட பலர் ஆதரவற்ற நிலையில் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில் அவர்களுக்காக உதவிக்கரம் நீட்டுகிறது பெண் வழக்கறிஞர்கள் குழு.
இதேபோல் சாலையோர பிளாட்பார்ம்களில் தங்கி இரவல் பெறுவோரை மீட்டு அவர்களுக்கான மறுவாழ்வு திட்டத்தின் கீழ் தேவையான உதவிகளை செய்யவும் இந்த வழக்கறிஞர்கள் குழு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்திராணி, சித்ரா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இரவல்பெறுவோர் மறுவாழ்வு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : மணப்பாறை காவல்நிலையம் மூடல்
மேலும், திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிபவர்கள் பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கான காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனை அருகே மனநலமின்றி சாலையோரம் வசித்து வந்த வடமாநில பெண் ஒருவரை மீட்டு அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.