மாலத்தீவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு - பயணிகள் உற்சாகம்
மாலத்தீவில் இருந்து முதன்முறையாக திருச்சிக்கு 146 பயணிகளுடன் சிறப்பு விமானத்துக்கு திருச்சி விமான நிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு
திருச்சி: மாலத்தீவில் இருந்து முதன்முறையாக திருச்சிக்கு 146 பயணிகளுடன் இயக்கப்பட்ட சிறப்பு விமானத்துக்கு திருச்சி விமான நிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மஸ்கட், ஓமன், துபாய், சிங்கப்பூர், மலேசியா, தோகா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை மாலத்தீவுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை.

மாலத்தீவில் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டது. மாலத்தீவிலிருந்து வெள்ளிக்கிழமை முதன்முதலாக இயக்கப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 146 பயணிகள் திருச்சி வந்தனா்.
திருச்சி மாலத்தீவு இடையே 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக விமானப் போக்குவரத்து நடைபெறும் நிலையில், தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பது வழக்கம். அதன்படி பகல் 1.50 மணியளவில் முதன் முதலாக மாலத்தீவில் இருந்து வந்த விமானத்துக்கு திருச்சி விமான நிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் விமான நிறுவனம் சார்பில் பூச்செண்டு கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக, காலை 8.15 மணிக்கு திருச்சியிலிருந்து மாலத்தீவு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் யாரும் செல்லவில்லை. மாறாக, சுமாா் 6.1 டன் காய்கனிகள், மலா்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மாலத்தீவில் இருந்து விமானம் இயக்கப்பட்டது திருச்சி விமான நிலைய வளர்ச்சியில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை சிங்கப்பூர், மாலத்தீவு, சார்ஜா, கோலாலம்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டு சென்றது. அதேபோன்று நேற்று காலை முதல் மாலை வரை தோகா, ஷார்ஜா, துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.
நேற்று ஒரே நாளில் 12 விமான சேவைகள் திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்றதும், திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications