கீதா ஜீவனை மிரட்டிய மறுநாளே.. சசிகலா புஷ்பா வீட்டில் பரபர தாக்குதல்.. கார் உடைப்பு.. பதற்றம்
தூத்துக்குடி: அமைச்சர் கீதா ஜீவனுக்கு மிரட்டல் விடுத்த 24 மணி நேரத்திற்குள், பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சேர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா புஷ்பா வீட்டை சேதப்படுத்திய மர்ம நபர்களை பிடிக்க, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக திமுக - பாஜக தலைவர்களிடையே வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார். அதேபோல் ரஃபேல் வாட்சிற்கான ஆதாரத்தையோ, ஊழல் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தையோ அண்ணாமலை இதுவரை வெளியிடவில்லை.
கீதா ஜீவன் vs சசிகலா புஷ்பா.. வெளியே வர கால் இருக்காது, பேச நாக்கு இருக்காது என மிரட்டல்
அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம்
இதனால் திமுகவினர் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாஜகவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் மேடைக்கு நாங்கள் ஏறுவோம். சூடு, சொரணை இருந்தால் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.
சசிகலா புஷ்பா மிரட்டல்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேசுகையில், நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, அண்ணாமலையை பற்றி பேச நாக்கு இருக்காது என்று பேசினார். அதுமட்டுமல்லாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் உழைக்கிறார். மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை என்று தெரிவித்தார்.
கண்ணாடிகள் உடைப்பு
இந்த நிலையில் இன்று காலை சசிகலா புஷ்பா நாகர்கோவிலுக்கு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். அதன்பின்னர், பிஎன்டி காலனியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு இருந்த கார் கண்ணாடி, வீட்டு கண்ணாடி, ஜன்னல் கண்ணாடிகள், சேர் மற்றும் பூந்தொட்டிகள் ஆகியவற்றை உடைத்து மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு ஏராளமான பாஜக நிர்வாகிகள் குவிந்தனர். பின்னர் சசிகலா புஷ்பா வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடி சிப்காட் போலீசார் சசிகலா புஷ்பா வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.