கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது சோகம்..பஸ் மீது கார் மோதியதில் 3 என்ஜினீயரிங் மாணவர்கள் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
கோவில் பட்டி அருகே உள்ள கிருஷ்ணா நகர் என்ற இடத்தை சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவரின் மகன் கீர்த்திக். வயது 23.
கீர்த்திக் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
ஜெயலலிதாவின் டெக்னிக்.. அது உதயசூரியன் தானே! கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முத்திரை பதித்த அரசு
கல்லூரி மாணவர்கள்
கல்லூரிக்கு காரில் செல்லும் கீர்த்திக் வழக்கம் போல் நேற்று கல்லூரி முடிந்ததும் தனது காரில் உடன் படிக்கும் நண்பர்களை ஏற்றிக்கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். காரை கீர்த்திக் ஓட்டிச் செல்ல உடன் வந்த மாணவர்களான நாலாட்டின்புத்துர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (வயது 23), வானரமுட்டி வெயிலுகந்த புரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் செந்தில் குமார் (வயது 24), ஓ.மேட்டுப்பட்ட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 22), வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்த அழகர் சாமி மகன் அருண்குமார் (வயது 21) ஆகியோர் காரில் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
பஸ் - கார் மோதி விபத்து
காரில் நண்பர்கள் ஜாலியாக வந்து கொண்டிருந்தனர். இவர்களது கார் கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி பகுதியில் மேம்பாலத்தில் சென்று கோண்டிருந்தது. அப்போது கோவில்பட்டியில் இருந்து ஜமின் தேவர் குளம் நோக்கி தனியார் பேருந்து எதிரே வந்து கொண்டிருந்தது. மேம்பாலத்தில் வைத்து எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பஸ் மீது கார் மோதியதில் கார் உருக்குலைந்தது.
3 பேர் பலி
காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய கீர்த்திக், அஜய் , செந்தில் குமார் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த மாணவர்களான அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவது
சமீபகாலமாக கல்லூரி மாணவர்கள் பலரும் வாகனங்களில் செல்லும் போது விபத்தில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழப்பது அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவது , சரியாக போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் செல்வது என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. பெற்றோர்களும் பைக்குகளையும் கார்களையும் பிள்ளைகள் ஆசையுடன் கேட்பதால் வாங்கி கொடுத்து விடுகின்றனர். அதன்பிறகு அவர்களை முறையாக கண்காணிப்பது இல்லை. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கி கொடுத்தாலும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.