காவலர் முத்துராஜ் நள்ளிரவில் அதிரடி கைது.. பாய்ந்தது கொலை வழக்கு.. ஜூலை 17 வரை நீதிமன்ற காவல்
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கான்ஸ்டபிள் முத்துராஜ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜூலை 17ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரவு கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டி சாத்தான்குளம் போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
லாக்கப்பில் வைத்து அவர்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கொந்தளிப்பு
இந்த சம்பவம், நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை வேகம் பிடித்தது.

இன்ஸ்பெக்டர் கைது
இந்த கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேஸிங் செய்து பிடிக்கப்பட்டார். காரில் தப்பி ஓடிய அவர் கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னால் விரட்டி வந்த சிபிசிஐடி போலீசார், கங்கைகொண்டான் சோதனை சாவடியில் வைத்து ஸ்ரீதரை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

முத்துராஜ் கைது
முன்னதாக சப்-இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முத்துராஜ் என்ற தலைமை காவலர் கைது செய்யப்பட்டதாகத்தான் முதலில் தகவல் வெளியானது. ஆனால், இதை காவல்துறை மறுத்தது. இந்த நிலையில்தான் முத்துராஜ் குடும்பத்தார், அவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து மறைத்து வைத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

கொலை வழக்கு
இது தொடர்பாக சிபிசிஐடி ஐஜி சங்கரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர், இதுபோல மறைத்து வைக்க வேண்டிய அவசியமே கிடையாது. இது கற்பனையான தகவல் என்று தெரிவித்தார். மேலும் விரைவில் நாங்கள் அவரை கைது செய்வோம் என்று உறுதியளித்திருந்தார். இந்த நிலையில்தான் முத்துராஜ் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் வைத்து போலீஸாரால் நேற்று இரவு கைது செய்யபட்டார். இதையடுத்து அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இன்று, முத்துராஜ் மீதும் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Recommended Video

நீதிமன்ற காவல்
இதையடுத்து முத்துராஜுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். காவலர் முத்துராஜுக்கு ஜூலை 17ம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications