கிரேனில் ராட்சத மாலை.. பிரமாண்ட வரவேற்பு.. அட யாருப்பா இவரு? குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்கு போனவராம்!
தூத்துக்குடி : குண்டர் சட்டத்தில் சிறைக்குச் சென்று ஜாமினில் விடுதலையான திமுக நிர்வாகிக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் மிரட்டிய வைகுண்ட பாண்டியன் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கயத்தாறைச் சேர்ந்த ஒருவரை வைகுண்ட பாண்டியன் வெட்ட முயற்சித்ததாக புகாரின் பேரில், அவர் மீது வன்கொடுமை தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்ட வைகுண்ட பாண்டியனுக்கு, அவரது ஆதரவாளர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்துள்ளது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

அமைச்சர் - ஒன்றிய செயலாளர்
தூத்துக்குடி மாவட்டம் பத்மநாபமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சிவகாமி. இவரது கணவர் திமுகவைச் சேர்ந்த வைகுண்ட பாண்டியன், அதே ஊராட்சியில் வைகுண்ட பாண்டியன் துணை தலைவராக இருந்து வருகிறார். இவர் கருங்குளம் திமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வைகுண்ட பாண்டியன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

குண்டர் சட்டத்தில் கைது
அந்த ஆடியோவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை வைகுண்ட பாண்டியன் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியிருந்தார். இதையடுத்து வைகுண்ட பாண்டியன் திடீரென கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அமைச்சரை அசிங்கமாக திட்டிய விவகாரத்தில் தான் வைகுண்ட பாண்டியன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

பிரமாண்ட வரவேற்பு
இதையடுத்து வைகுண்ட பாண்டியன் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்து கேடிசி நகர் வழியாக திருச்செந்தூர் சாலை வரை உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக சீனிவாசன் நகர் அருகில் திருச்செந்தூர் சாலையில் வைத்து வைகுண்ட பாண்டியனுக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வாழ்க கோஷம் எழுப்பினர்.

அடேங்கப்பா
ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு அமைச்சருக்கான வரவேற்பையே மிஞ்சும் வகையில் ஆதரவாளர்கள் கொடுத்த இந்த வரவேற்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி அமைச்சரை மிரட்டி சிறைக்கு சென்று வந்த அதே கட்சியைச் சேர்ந்த நிர்வாகிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவமும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோதல்
மேலும் அமைச்சர் தரப்புக்கும் வைகுண்ட பாண்டியனுக்கும் இடையே முதல் போக்கு இருந்து வரும் நிலையில் தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதை காட்டிக் கொள்ளும் வகையிலேயே இந்த வரவேற்பு சம்பவம் நடைபெற்றதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே வைகுண்ட பாண்டியனுக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications