"சார்.. கலெக்டர் ஆபீசுக்கு ஒரு டிக்கெட்.." அடடே பஸ்சில் இருப்பது கனிமொழி.. கலகலத்த தூத்துக்குடி
தூத்துக்குடி: "சார்.. கலெக்டர் ஆபீசுக்கு ஒரு டிக்கெட்.." என்ற பெண் குரலை கேட்டு கண்டக்டர் திரும்பி பார்க்கும்போது.. அங்கே லோக்சபா எம்பி கனிமொழி உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும்? ஆனால் இன்று தூத்துக்குடியில் அதுதான் நடந்துள்ளது.
தூத்துக்குடி நகருக்குள் மாநில அமைச்சர் கீதாஜீவனுடன் ஒன்றாக சேர்ந்து பஸ்ஸில் பயணம் செய்து உள்ளார் தூத்துக்குடி லோக்சபா தொகுதி எம்பி கனிமொழி.
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் நகரப் பேருந்து சேவையை கனிமொழி மற்றும் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் ஆகியோர் பங்கேற்று இன்று, தொடங்கி வைத்தனர்.

இலவச பஸ் டிக்கெட்
பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்ததோடு விடவில்லை, அதே பஸ்ஸில் கனிமொழி மற்றும் கீதாஜீவன் ஆகிய இருவரும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்தபடி பயணம் செய்தனர். தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு, டவுன் பஸ்களில் பெண்களுக்கு டிக்கெட்டுக்கு பணம் வாங்குவது கிடையாது. இவ்வாறான இலவச பஸ் டிக்கெட்டில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என்று அச்சிடப்பட்டு இருக்கும்.

கனிமொழி, கீதா ஜீவன்
இலவச பயணம் தான் என்ற போதிலும் கூட, இந்த பயணச்சீட்டை பஸ்சில் பயணிக்கும் பெண்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். இப்படித்தான் பஸ்ஸில் நடத்துனராக பணியில் இருந்தவரிடம் கனிமொழியும் டிக்கெட் வாங்கி உள்ளார். கீதா ஜீவனும், இலவச டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார். இந்த புகைப்படத்தை கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார்.

பெண்களுக்கு பலன்
பயணம் செய்தது விஷயம் கிடையாது.. பெண்கள் இந்த திட்டத்தால் ரொம்பவே பலன் பெற்று உள்ளார்கள் என்பதை சொல்வதற்காகத்தான், கனிமொழி இந்த படத்தை பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் இதுபற்றி அவர் கூறுகையில், கட்டணமில்லா பேருந்து சேவையை பெருமளவிலான பெண்கள் பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது . இந்த திட்டம் தமிழக பெண்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாகி உள்ளது, என்று தெரிவித்து இருக்கிறார்.

ஆக்சிஜன் உற்பத்தி
முன்னதாக, அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது , மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கண்டிப்பாக திறக்கப்படாது. கடந்த ஆட்சிக் காலத்தின் போது ஆக்சிஜன் தேவை ஏற்பட்டதால் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் பிளான்ட் மட்டும் திறக்கப்பட்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டது. இதற்கு திமுக ஆதரவு அளித்தது.

ஸ்டெர்லைட் தேவையில்லை
இதன் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு ஓரளவு ஆக்சிஜன் சப்ளை கிடைத்தது . இருப்பினும் தமிழகம் முழுக்க வழங்கக் கூடிய அளவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தி நடைபெறவில்லை. இப்போது உள்ள சூழ்நிலையில் ஆக்சிஜன் தேவை இல்லை என்பதால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க தேவையில்லை, என்று தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தேவை ஓவர்
மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதற்கு ஆங்காங்கே சிறிய சிறிய அளவில் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் வாங்கும் வாய்ப்பு வசதி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், முன்பு நடந்ததைபோல ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு மக்கள் கஷ்டப்படும் மோசமான நிலை மீண்டும் வராது. இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications