அரசு பஸ்களில் தமிழ்நாடு எங்கே.. ஸ்டிக்கர் ஒட்டி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாதக
தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் நின்ற அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு என்ற பெயர் எங்கே?" என கேள்வி எழுப்பியும், அந்த பஸ்களில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டியும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மட்டும் இன்றி மதுரையிலும் நாம் தமிழர் கட்சியின் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாமல் வெறுமனே அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டு உள்ளதை கண்டித்து பஸ்களில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

அரசு போக்குவரத்து கழகம்
தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று பஸ்களின் முன்பகுதிகளிலும், பக்கவாட்டு பகுதிகளிலும் எழுதப்பட்டு இருக்கும். ஆனால் கடந்த ஓராண்டுகளில் தமிழ்நாடு என்ற பெயர் மட்டும் நீக்கப்பட்டு, வெறுமனே அரசு போக்குவரத்து கழகம் என்று மாற்றப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லாததை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு என்ற பெயர் இல்லாத பஸ்களில் தமிழ்நாடு என்ற எழுத்தினை ஸ்டிக்கராக அரசு பஸ்களில் ஒட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி ஆர்ப்பாட்டம்
அந்த வகையில் நேற்று தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு என்ற பெயர் ஸ்டிக்கரை அரசு பஸ்களில் ஒட்டினர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த போராட்டமானது நடத்தப்பட்டது. தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் நேற்று அரசு போக்குவரத்து கழகம் என்று மட்டும் உள்ள அனைத்து பஸ்களிலும் தமிழ்நாடு என்ற வண்ண ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மா. மு. தமிழ்நேயன், அன்னலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். மண்டல செயலாளர் இ. மாரிமுத்து முன்னிலை வகித்தார். அவர்கள் அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டினர். தொடர்ந்து சிறிது நேரம் அரசு பஸ்களில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரையிலும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். தூத்துக்குடி பஸ் நிலையம் மட்டும் இன்றி மதுரையிலும் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாத அரசு பஸ்களில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
ஏற்கனவே கர்நாடக மாநிலம் பெங்களூரில் தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் இல்லை என்று அங்குள்ள கர்நாடகத் தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டி இதேபோன்று ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் செய்தனர்.
கர்நாடக தமிழ் மக்கள்
பெங்களூர் வந்த தமிழ்நாடு அரசு பேருந்துகளில் எல்லாவற்றிலும் தமிழ்நாடு என்ற வாசகம் கொண்ட ஸ்டிக்கரை கர்நாடகத் தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஒட்டினர். அப்போது அவர்கள், "கேரளா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கும் போது தமிழக அரசு பஸ்களில் மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் ஏன் இல்லை என கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு பெயர் இல்லாததை கண்டித்து
வெறுமன மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் என்று மட்டுமே இருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர்கள் விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு முன்பாக தமிழ்நாடு என்ற பெயரை ஸ்டிக்கராக ஒட்டினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. இந்த நிலையில் தான் இதே பாணியில் நாம் தமிழர் கட்சியினரும் தமிழகத்தில் உள்ள அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாததை கண்டித்து போராட்டத்தினை தொடங்கியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications