ஆஹா கண்கொள்ளா காட்சி.. தமிழகத்தின் ஒரே சிவப்பு மணல் மேடு பாலைவனம்.. தேரிக்காட்டின் ஆச்சரியங்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்காடு பகுதி தமிழகத்தின் ஒரே மணல் மேடு பாலைவனம் என அழைக்கப்படுகிறது.
கண்களுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேல் என இருக்கும் இடங்கள் எப்போதுமே பார்ப்பதற்கு விருந்துதான். ஒவ்வொரு நிலபரப்பும் ஒவ்வொரு குணாதியத்தை கொண்டவை. அந்த மண் வளங்களுக்கு ஏற்ப விவசாயம் செய்யப்படும்.
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு சிவப்பு நிற மண் மேடு தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிக்காட்டில் காணப்படுகிறது. மிகவும் அற்புதமான இந்த பகுதி தற்போது தமிழக புவியியல் துறை டிரென்டாக்கி வருகிறது.

ஒரே மணல் திட்டு
இதுகுறித்து தமிழக புவியியல் துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிக்காடு என்ற இடம் உள்ளது. தமிழகத்தின் ஒரே மணல் திட்டு பாலைவனம் இதுதான். சிவப்பு மணல் மேடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் அருகருகே இரு பகுதிகள் உள்ளன. இங்கு நிறைய அய்யனார் கோயில்கள் உள்ளன.

அய்யனார் மண்
அய்யனாரின் பூமி என்றும் அழைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டு அதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாமிரபரணி மற்றும் கரும்நெய்யாறு ஆற்று படுகை இடையே இந்த தேரிக்காடு உள்ளது. இந்த பகுதிகள் எல்லாம் சமீப காலங்களாக, சட்டவிரோத மணல் திருட்டால் இயற்கை வளத்தை இழந்து வருவதாகவும், கூறப்படுகிறது.

தமிழக அரசு
இதை காப்புக் காடாக தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இது ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட இடம் என கூறுகிறார்கள். எப்போதாவது மணல் திட்டுக்கள் உள்ள இடத்தில் மரம் நடுவது நடக்கும். மற்றபடி பொதுமக்கள் அங்குள்ள கோயில்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்கிறார்கள்.

தென் கிழக்கு
மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு தென் கிழக்காக சரிந்த நிலையில் இந்த தேரிக்காடு காணப்படுகிறது. இதன் பரப்பளவு சுமார் 11 ஆயிரம் ஏக்கர் என கூறப்படுகிறது. இங்கு முந்திரி செடிகள் செழித்து வளரும். முந்திரி மரங்கள் செம்மண்ணை அதிகம் விரும்பக் கூடியது. காற்று அதிகமாக வீசும் போது மணல் குவிந்து பெரிய மேடு போல் மாறிவிடுகிறது. இங்கு காணப்படும் சிவப்பு நிற மணல் எப்படி தோன்றியது என உறுதியாக தெரியவில்லை. ஆனால் நிலவியல் அமைப்புதான் இதற்கு காரணம் என்கிறார்கள். இது தாமிரபரணி ஆற்று மணல் கிடையாது, கடல் மண்ணும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழமையானது
எனவே வேறு எங்கும் இல்லாமல் இங்கும் மட்டும் எப்படி பரவி கிடக்கிறது என்பதற்கு இதுவரை விடைகள் இல்லை. இது 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது. அதேநேரம், நெல்லை மாவட்டம் குட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் செம்மண் மேடுகள் அதிகம் உள்ளன. ஆனால் அவை தேரி கிடையாது. இறுக்கமாக இருக்க கூடியவை. அங்கும் முந்திரி தோட்டங்கள் அதிகம். ஆனால் தேரிக்காட்டில் மணல் தேரி போலவே உள்ளது. இந்த தேரிக்காட்டில் மழைக்காலத்திற்கு பிறகு வெல்வட் பூச்சிகள் அதிகம் வருகை தருமாம். தேரிக்காட்டில் ஒரு சுனையில் கோடைக்காலத்தில் கூட சுவையான தண்ணீர் கிடைப்பதாக கூறுகிறார்கள். தேரிக்காட்டிலுள்ள கற்குவேல் அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தேரிக்காட்டுக்கு அருகில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உள்ளது. அந்த கோவிலும் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த இரு கோவில்களிலுமே, முறையே, சிங்கம் 1, தாமிரபரணி உள்ளிட்ட திரைப்படங்களின் சூட்டிங்கை எடுத்திருப்பார் இயக்குநர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications