செந்தில் பாலாஜி தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன்?அமலாக்கத்துறை மனு மீது தூத்துக்குடி கோர்ட்டில் விசாரணை
தூத்துக்குடி: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை தம்மை இணைத்து கொள்ள கோரும் மனு மீது இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறை இணைந்தது. இவ்வழக்கில் தற்போது செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு அமலாக்கத்துறை நெருக்கடி கொடுத்ததால் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. செந்தில் பாலாஜி, அரசு மருத்துவமனையில் இருந்து உயர்நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை சந்தேகிக்க முடியாது என அமலாக்கத்துறைக்கு பதில் தந்துவிட்டது உச்சநீதிமன்றம்.
அமலாக்கதுறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருகிறார். இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் மற்றொரு அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கதுறையின் தலையீடு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறது. முந்தைய 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில், அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நீதிமன்றமாக படிகளேறினார் அனிதா ராதாகிருஷ்ணன். உச்சநீதிமன்றத்தின் கதவுகளையும் கூட அனிதா ராதாகிருஷ்ணன் தட்டிப் பார்த்தார். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தற்போது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்தது. இவ்வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது அமைச்சர் என்பதால் வழக்கு விசாரணைக்கு உதவ அமலாக்கத்துறையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் ஒரு மனுவை தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications