பள்ளிகள் திறப்பு எப்போது.. 'தனியார் பள்ளி கல்வி கட்டணம்'.. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!
தூத்துக்குடி: மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அப்படி பள்ளிகள் திறக்கப்படும் போது, பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 9முதல் 12ம் வகுப்பு வரை மட்டும் கொரோனா தொற்று குறைந்து இருந்த கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மற்றும் ஜனவரில் திறந்திருந்தன. அதுவும் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் வரலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கல்லூரிகளும் கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் திறந்து இருந்தன.
ஆனால் கொரோனா இரண்டாது அலை பரவியதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்லூரிகளும் மீண்டும் மூடப்பட்டன, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடந்தன. கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வழியாகவே தேர்வுகளும் நடந்தன- இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வரும் நிலையில் ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவிலலை.

மருத்துவர்கள் ஆலோசனை
இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, தமிழக முதல்வரின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை பரவும் என எதிர்பார்க்கக் கூடிய நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பள்ளிக்கு குழந்தைகள்
பள்ளிகள் திறக்கப்படும் போது பெற்றோர்கள் அச்சம் தவிர்த்து தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும். எனினும் மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

முதல்வர் நடவடிக்கை
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்ற கருத்துக்களே அதிகம் வருகிறது, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வரின் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும்,

கல்வி கட்டணம்
தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40% கட்டணம் முதல் தவணையாகவும் , 35% கட்டணம் இரண்டாம் தவணையாகவும் செலுத்துவதற்கான உத்தரவினை நடைமுறைப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பப்படும்" இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications