பெற்றோரே உஷார்.. ஈர கையுடன் செல்போன் சார்ஜரை தொட்ட சிறுவன் துடிதுடித்துப் பலி! வேலூர் அருகே ஷாக்
வேலூர் : வேலூர் மாவட்டம் சின்னஅல்லாபுரம் அருகே சார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை எடுக்க முயற்சித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள சின்னஅல்லாபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில் - பானுமதி தம்பதியினருக்கு 9 வயதில் கோபிநாத் என்ற மகன் உள்ளார்.
கோபிநாத்தின் தந்தையான செந்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதோடு, அவர் அந்த பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சிறுவன் பலி
இதனால் செந்தில் மனைவி மகனுடன் கிருஷ்ணகிரியிலேயே தங்கியுள்ளார். அவரது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள நிலையில், 5ஆம் வகுப்புக்குச் செல்ல தயாராக இருந்தார். இதற்காக செந்தில் மகனுக்காக புத்தாடைகள், புத்தகப் பை, ஷு உள்ளிட்டவற்றை கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான் வாங்கியிருக்கிறார்.
செல்போன் சார்ஜர்
இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் செந்தில், பானுமதி, கோபிநாத் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இருந்து வேலூரில் உள்ள சொந்த வீட்டிற்கு கார் மூலம் வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை செந்தில் வெளியே சென்றிருந்த நிலையில், பானுமதி தனது செல்போனுக்கு வீட்டில் உள்ள ப்ளக் பாய்ண்டில் சார்ஜ் செய்வதற்காக போட்டுள்ளார். இந்நிலையில் தாயின் செல்போனில் கேம் விளையாட நினைத்த சிறுவனான கோபிநாத், குளித்துவிட்டு வந்த ஈரக்கையுடன் செல்போனை சார்ஜரில் இருந்து எடுக்க முயற்சித்துள்ளான்
பெற்றோர்கள் சோகம்
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கோபிநாத் மீது மின்சாரம் பாய்ந்து அலறியபடி மயங்கி விழுந்தான். கோபிநாத் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பானுமதி கடும் அதிர்ச்சியடைந்ததோடும் அருகிலிருந்தோரை உதவிக்கு அழைத்துள்ளார். விரைந்து வந்த அவர்கள் சிறுவன் கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் கோபிநாத் ஏற்கனவே இறந்து விட்டதாக அவனை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
போலீசார் விசாரணை
அதையடுத்து சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.