ஆட்டை கடித்து மாட்டை கடித்து.. மாஜி மந்திரிக்கே விபூதி அடித்த அதிமுக பிரமுகர்- தட்டி தூக்கிய போலீஸ்!
வேலூர் : தான் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர் எனக் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.57 லட்சம் மோசடி செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், பணத்தை திருப்பிக் கேட்கும் போதெல்லாம், தற்கொலைக்குத் தூண்டுவதாக அவர்களின் பெயர்களை எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி வந்துள்ளார் அதிமுக பிரமுகர் சுகுமார்.
சமீபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரிடம் தான் ஏமாந்து விட்டதாகவும், தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் சுகுமார்.

அதிமுக பிரமுகர்
வேலூர் காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் அதிமுகவில் வேலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2018ல் அதிமுக ஆட்சிக்காலத்தில், அமைச்சர்களுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி பலரிடம் ரேஷன் கடை விற்பனையாளர் வேலை, அரசு அலுவலகத்தில் டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சக் கணக்கில் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

வேலை வாங்கி தருவதாக மோசடி
நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தராமல் சுகுமார் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பணத்தை இழந்தவர்கள் திரும்பக் கேட்டுத் தொந்தரவு செய்யும்போதெல்லாம், தற்கொலைக்குத் தூண்டுவதாக அவர்களின் பெயர்களுடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியூருக்குத் தப்பி ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார் சுகுமார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகத்தில் சுகுமார் மீது புகார் அளித்தனர்.

அமைச்சர் மீது புகார்
இதையடுத்து சுகுமார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் பதிவிட்டுள்ளார் சுகுமார். அதில், "மந்திரியிடம் ஏமாந்துவிட்டேன். என் கல்யாண நாளிலேயே நான் தூக்கில் தொங்கப் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்" என பதிவிட்டுவிட்டு, திடீரென தலைமறைவாகியுள்ளார் சுகுமார்.

மீண்டும் புகார்
இந்நிலையில், வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த ரேவதி என்பவர் வேலூர் எஸ்.பி ராஜேஷ்கண்ணனிடம் அளித்த மனுவில், சுகுமார் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8.25 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுகுமாரை தேடி வந்தனர்.

அதிரடி கைது
பெங்களூரில் தலைமறைவாக இருந்த சுகுமாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சரின் பெயரைச் சொல்லி பலரிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் என சுமார் ரூ.57 லட்சம் வரை சுகுமார் மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications