வேலூர் சிறையில் 103 பாஜகவினர் விடுதலை! ஆரத்தியுடன் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து வரவேற்பு..சர்ச்சை
வேலூர்: வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 103 பாஜகவினர் இன்று ஜாமினில் விடுதலையாகினர். இந்நிலையில் சிறை வாசலில் அவர்களுக்கு பாஜகவினர் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ‛ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் நடைபெறும் பணிகளில் முறைகேடு புகார்கள் எழுந்துள்னள.
இதேபோல் வேலூர் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
டோண்ட் வொர்ரி.. அடுத்த தேர்தலில்.. 'பாஜக துடைத்தெறியப்படும்'.. லாலு பிரசாத் யாதவ் விளாசல்
பாஜகவினர் போராட்டம்
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு பாஜகவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 13ம் தேதி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடி சென்றனர். போலீசார் தடுப்புகள் வைத்து தடுத்தனர். ஆனால் அவர்கள் தடுப்புகளை மீறி மாநகராட்சி அலுவலகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
103 பேர் மீது வழக்கு
இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, மாநகராட்சி அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது புகார் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் பாஜகவை சேர்ந்த 103 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர்கள் கூறினர். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
ஆரத்தி எடுத்து வரவேற்பு
இதையடுத்து பாஜகவினர் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரேவற்றனர். ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டவர்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். பாஜகவின் மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் கார்த்தியாயினி உடனிருந்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.