எடப்பாடி பழனிச்சாமி சிறந்த கல்விமான் மேதை...ஆளுநரை தினமும் திட்டுவோம் - துரைமுருகன் தாக்கு
நீட் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் வரைக்கும் திட்டிக்கொண்டே இருப்போம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை: எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கல்வி மேதை என்றும் அவர் நீட் பற்றி சட்டசபையில் பேச மறுப்பதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நகைச்சுவையான குட்டிக்கதையை சொல்லி வாக்கு சேகரித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
ராணிப்பேட்டை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்ச்சியானது, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளுக்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் மூலம் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் வார்டுகளில் உள்ள அனைத்து பொது பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியபோது, கறிச்செட்டியில் நல்ல அகப்பைகளை போட்டு எடுக்கும் போது 4 குண்டுகள் சேர்ந்து வருவது போல திமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் நல்ல அகப்பைகள் என நகைச்சுவையான குட்டி கதையை கூறி உற்சாகப்படுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்க.. அடிக்கடி குறுக்கே வராதீங்க.. காங். எம்எல்ஏவை கண்டித்த துரைமுருகன்
உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்
அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும், அதனை மக்களுக்கு நேரடியாக சென்று சேர்க்கும் வகையில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். எனவே உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறும் நபர்கள் மக்களின் தேவைகளை அறிந்து அதனை அரசிடம் விரைவாக பெற்று அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
பெண்களுக்கு சம பங்கு
பெண்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக, நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக பெண்களுக்கு 50 சதவிகித வாய்ப்பு கொடுத்துள்ளது. பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டும் என்பதில், திமுக உறுதியாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் மாநகராட்சி கொண்டுவரப்பட்ட ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருந்துள்ளனர் என்றார்.
நிர்வாகத்தை கவனிக்க முடியவில்லை
இது போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டு உள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆன நிலையில்,கொரானா தொற்று மற்றும் மழை இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவற்றால் மக்களின் உயிர் முக்கியம் என்பதால், அவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. நிர்வாகத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லை. எனவே இனிவரும் காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நீட் விலக்கு மசோதா சட்டம்
இந்தியாவிலேயே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதாக பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். 234 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, நீட் தேர்வு தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் அளித்தால், அவர் அதை வாங்கிக்கொண்டு கிடப்பில் போட்டுள்ளார்.
ஆளுநரை திட்டுவோம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தில் அடித்தாற்போல், அதை திருப்பி அனுப்பி உள்ளார்.மீண்டும் சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்டி அதனை , சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பியுள்ளோம். அதனை அவர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி விட்டு நிம்மதியாக அவர் இருந்து விடலாம். இல்லையென்றால் தினமும் ஆளுநரை திட்டிக் கொண்டே இருப்போம் என துரைமுருகன் கூறினார்.
கல்வி மேதை இபிஎஸ்
நீட்விவகாரம் குறித்து ஸ்டாலினை பொதுவிவாதத்திற்கு பழனிச்சாமி அழைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த துரைமுருகன், எடப்பாடி பழனிச்சாமி சிறந்த கல்விமான் மேதை என்றும் சட்டசபையில் அவருக்குபேச வாய்ப்பளித்த போது பயன்படுத்தாதவர் என்று குறிப்பிட்டார். இப்போது விவாதத்திலா பேசப்போறார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி சட்டப் பேரவையில் நேரம் அளிக்கப்பட்டது.
பாஜக இல்லவே இல்லை
எந்த இடத்திலும் நீட் குறித்து பேச அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ள போது பாஜக அலுவலகம் தாக்கப்படுவதாக அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு,முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது பாரதிய ஜனதா கட்சி என்ற ஒன்று தமிழகத்தில் முளைக்கவே இல்லை என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றார்.