விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி? தனிக்கட்சி தொடங்குகிறார் ப சிதம்பரம்? அண்ணாமலை சொன்ன முக்கிய மேட்டர்
வேலூர்: ‛‛காங்கிரஸ் கட்சி விஜயுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் ப சிதம்பரம் புதிய கட்சியை தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று பாஜகவின் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவின் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக காங்கிரஸில் ராகுல் காந்திக்கு நேர் எதிரான கருத்துகள் பல ஆண்டு காலமாக இருக்கிறதே? என்ற கேள்வியை பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு அண்ணாமலை கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரைக்கும் யார் அதிகமாக டெல்லிக்கு (காங்கிரஸ் மேலிடம்) ஆதரவாக இருப்பது என்று ஒரு குரூப்பும், தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பது என்று இன்னொரு குரூப். தமிழக காங்கிரஸில் இந்த 2 குரூப் தான். ஒன்று டெல்லி ஆதரவு. இன்னொன்று தமிழக ஆதரவு. இந்த 2 குரூப்பை தவிர தமிழக மக்களுக்காக பேசக்கூடிய குரூப் காங்கிரஸில் இல்லை.
இன்று பத்திரிகையில் பார்த்தேன். காங்கிரஸ் கட்சி விஜயுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் ப சிதம்பரம் புதிய கட்சியை தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று காலையில் பெரிய நாளிதழ் செய்தி போட்டு இருந்தது.
அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவில் உள்ள ஒரு தலைவர் விஜயை பார்த்துவிட்டு போட்டோ போடுகிறார். தமிழகத்தின் கடன் நிலைமை பற்றி பேசுகிறார். நேர் எதிர் கருத்து பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஜோதிமணி இன்று வேறு கருத்தை சொல்லி உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வேறு கருத்து. ராகுல் காந்தியின் கருத்து வேறாக உள்ளது. இதனால் காங்கிரஸ் என்ற கதவை சாத்திவிட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் நல்லவர்களாக இருந்தவர்கள் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். காமராஜர் காலத்தில் கதர் சட்டை போட்ட எத்தனையோ பேர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிட்டனர். அண்ணன் ஜிகே வாசன் தலைமையை ஏற்று அவர்கள் வந்துள்ளனர். மூப்பனார் காலத்தில் இருந்தே இந்த பக்கம் வந்துவிட்டனர்.
இன்று இருக்கும் காங்கிரஸ் என்பது இந்திரா காங்கிரஸ். காமராஜரை எதிர்த்து அவரை தோற்கடிக்க வேண்டும் என்று பாடுபட்ட காங்கிரஸ் தான் இன்று காங்கிரஸ் கட்சியாக உள்ளது. ஆகவே காங்கிரஸ் கட்சி அழிந்து கொண்டு இருக்கும் கட்சி. அதற்கு அதன் தலைவரே ஒரு சான்று. இன்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எப்படி இருக்கிறார்? என்று நீங்களே பாருங்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்த பக்கம், அந்த பக்கம் சண்டையிட்டு 2026 சட்டசபை தேர்தலில் நடுரோட்டில் நிற்பார்கள். அதற்கான எல்லா வேலையையும் ஆரம்பிச்சிட்டாங்க. குதிரை பேரம் பேசுறாங்க. ஆட்சியில் பங்கு கேட்கிறாங்க. அதிக சீட் வேண்டும் என்கிறார்கள்.
இது எல்லாம் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் விஜய் பக்கம் போவோம் என்கிறார்கள். அடிக்கடி காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தமிழக தலைவர்களை சமாதானம் செய்ய வாரம் வாரம் வருகிறார்கள். அவர் போடும் இண்டிகோ டிக்கெட்டிற்கே காங்கிரஸ் கட்சியின் கஜானா காலியாகி விடுவது போல் உள்ளது. அவ்வளவு பேரை அனுப்பி வைக்கிறார்கள். இந்தியாவில் எப்படி காங்கிரஸ் கட்சி இல்லையோ.. அதேபோல் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டுள்ளது'' என்று சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications