இரவில் டாக்டர்கள் இருப்பதில்லை! கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க! ஆக்ரோஷமான அமைச்சர் துரைமுருகன்!
வேலூர்: வேலூர் மாவட்டம் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் புகாருக்குள்ளான மருத்துவரை கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க என அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் அமைச்சர் துரைமுருகன் கொந்தளித்துவிட்டார்.
உள்ளூர்காரர்களை வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக நியமிக்க வேண்டாம் என்றும் மாலை 6 மணி ஆனால் போதும் வீட்டுக்கு பெட்டியை கட்டிவிடுகிறார்கள் எனவும் அமைச்சர் துரைமுருகன் கடுகடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகனும், மா.சுப்ரமணியனும் நேற்று ஒரே நாளில் 10 அரசு மருத்துவமனைகளில் அதிரடி ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பாலாற்றில் அணை கட்டினால்..உச்சநீதிமன்றத்தில் வழக்கு!ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!
10 மருத்துவமனைகளில் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை திட்டப்பணிகளை தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன், மூத்த அமைச்சரான துரைமுருகனையும் அழைத்துக் கொண்டு 10 அரசு மருத்துவமனைகளில் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய போது, அமைச்சர் துரைமுருகனிடம் புகார் சொன்ன முதியவர் ஒருவர், இங்கு மருத்துவர்கள் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும் முறையான பதில்கள் வருவதில்லை எனவும் முறையிட்டார்.
மருத்துவர்கள் இல்லை
மேலும், இரவில் பாம்புக்கடிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கக் கூட மருத்துவர்கள் இருப்பதில்லை என மற்றொருவர் புகார் கூறினார். பொதுமக்கள் இவ்வாறு கூறுவதை கேட்டு ஆவேசமான அமைச்சர் துரைமுருகன், அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார். அந்த விளக்கம் ஏற்கத்தக்க வகையில் இல்லாததால் நாற்காலியில் இருந்து கோபமுடன் எழுந்த இவர், அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் சார் முதலில் இவங்கள சஸ்பெண்ட் பண்ணுங்க என ஆக்ரோஷமானார்.
இரவுப்பணி
அதைத் தொடர்ந்து இரவுப் பணி பார்க்க வேண்டிய மருத்துவரை ஆன் தி ஸ்பாட்டிற்கு வரவழைத்து எல்லோர் முன்னிலையிலும் கொடு கொடுவென கொடுத்தார் அமைச்சர் துரைமுருகன். இவர் இவ்வளவு தூரம் கோபம் அடைவார் என்பதை எதிர்பார்க்காத மருத்துவர்களும், அமைச்சர் சுப்ரமணியனும் திகைத்துப் போனார்கள். இதையெல்லாம் விட, அமைச்சர் துரைமுருகன் கூறிய மற்றொரு விவகாரம் தான் அந்த ஆய்விலேயே ஹைலைட். எனக்கு இதைப்பார்த்தால் ஆஸ்பத்திரி மாதிரியே தெரியலை என மருத்துவ நல அலுவலரிடம் கடிந்துக்கொண்டார் அமைச்சர் துரைமுருகன்.
தள்ளிநின்ற கட்சியினர்
அமைச்சர் துரைமுருகன் கோபம் கொப்பளிக்க இருந்ததை கண்டு கட்சியினர் சற்று தள்ளியே நின்று கொண்டனர். அண்மையில் தான் காட்பாடியில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்ய வைத்தார் அமைச்சர் துரைமுருகன். அடுத்ததாக புகாருக்குள்ளான அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது சாட்டையை சுழற்றியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.