முதல் நாள் திருமணம்.. மறுநாள் காலை மணப்பெண் தற்கொலை.. துடித்துப்போன வேலூர்.. என்ன நடந்தது?
வேலூர்: வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகள் புவனேஸ்வரி (வயது 21) காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 15-ம் தேதி புவனேஸ்வரிக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் (28) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

புதுமணப்பெண்
திருமணம் முடிந்து புது மாப்பிள்ளை, புவனேஸ்வரியுடன் அவரது வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு மணமக்கள் உள்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நேற்று அதிகாலை புவனேஸ்வரியின் பாட்டி பாப்பாம்மாள் கழிவறைக்கு செல்ல முயன்றார். அப்போது, கழிவறையின் கதவு பூட்டி இருந்ததால் அவரால் திறக்க முடியவில்லை. தூங்கிக்கொண்டிருந்த பேரன் சிவாவை எழுப்பி கழிவறை கதவை திறக்க சொன்னார்.

ஜன்னல் வழியாக...
ஆனால் சிவாவாலும் கதவை திறக்க முயவில்லை. ''இந்த நேரத்தில் இவ்வளவு நேரம் யாரும் கழிவறையில் யாரும் இருக்க மாட்டார்களே. அப்படியே ஆள் இருந்தாலும் ஏன் கதவை திறக்கவில்லை '' என்ற சந்தேகம் அடைந்த சிவா வீட்டின் வெளியே சென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது கழிவறை உள்ளே புவனேஸ்வரி சேலையால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உயிரிழந்து விட்டார்
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவா அலறினார். உடனே புவனேஸ்வரியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புவனேஸ்வரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக்கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கட்டாய திருமணம்
அப்போது பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது புவனேஷ்வரிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அவர் தொடர்ந்து படிக்க விரும்பி உள்ளார். ஆனால் அவரது பெற்றோர்கள் மணிகண்டனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளனர். இருவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகும் மணிகண்டனிடம் செல்போனில் புவனேஷ்வரி சரிவர பேசவில்லை. விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications