விழுப்புரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு.. கடலூரில் 5 பேர் டிஸ்சார்ஜ்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் 5 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்துள்ளனர்.

அவர்களை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் மருத்துவர்கள் கைதட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கடலூர் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளதால், கடலூரில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 குறைந்துள்ளது.


இதனிடையே விழும்புரம் மாவட்டம் பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த 55 வயதான முதியவர் காய்ச்சல் மற்றும் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

உயிரிழந்த முதியவரின் ரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 51 வயது தலைமை ஆசிரியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதையை நிலவரப்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிஸ்சார்ஜ்:
இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் இன்று வீடு திரும்பினார். அவரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் மாஹே பகுதியில் ஒரு மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.

அங்கு மேலும் ஒரு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து 6 பேர் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அரியாங்குபத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அவரை மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதார துறை இயக்குனர் மோகன், மருத்துவமனை ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், கை தட்டியும் வழி அனுப்பி வைத்தனர். தற்போது புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 5 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications