திமுகவுக்கு போவாரோ.. பாஜகவில் இருப்பாரோ.. ‘எங்களை அழிக்க முடியாது’ - கொட்டித் தீர்த்த சிவி சண்முகம்!
விழுப்புரம் : ஓ.பன்னீர்செல்வம் நாளை திமுகவில் இருப்பாரா அல்லது பாஜகவில் இருப்பாரா என தெரியாது என ஈபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நல்லாளம் கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது திமுக அரசையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

ஒரே கட்சி அதிமுக
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், "அதிமுக செயல்படவில்லை, முடங்கிவிட்டது என பலரும் கூறி வருகின்றனர், ஆனால் இன்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வரும் ஒரே கட்சி அதிமுக தான். அண்ணா என்று கூறும் திமுக ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை. இதுதான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள வித்தியாசம்.

எத்தனை பன்னீர் வந்தாலும்
எத்தனை பன்னீர்செல்வம் வந்தாலும், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சர் பதவியை அனுபவித்துவிட்டு, கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து உடைத்து, அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் திருடி சென்றுவிட்டனர். அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து அதிமுகவை முடக்கிவிடலாம் என நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது.

நாளை எங்கு இருப்பாரோ
ஓ.பன்னீர்செல்வம் நாளை திமுகவில் இருப்பாரா அல்லது பாஜகவில் இருப்பாரா என யாருக்கும் தெரியாது. தொண்டர்கள் உள்ளவரை யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. 100 பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. ஏற்கனவே நூறு துரோகிகளை பார்த்த இயக்கம் அதிமுக" எனப் பேசினார்.

இப்போது மட்டுமல்ல
மேலும் பேசிய சிவி சண்முகம், "தமிழகத்தில் அடுத்து உயரப் போவது பேருந்து கட்டணம். உயர்வது மட்டும் இல்லை அதை தனியார்மயமாக்குவதற்கும் திமுக அரசு பாடுபட்டுக் கொண்டுள்ளது. மின்சார கட்டண உயர்வும் தற்போது மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் 6% மின்சார கட்டணம் உயரும். இதற்கெல்லாம் மத்திய அரசுதான் காரணம் என்கின்றனர். மின் கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும்.

பிடிக்க வேண்டிய நேரத்தில் பிடிப்போம்
பொங்கல் பரிசில் கொடுக்கப்பட்ட வெல்லம் போன்று அமெரிக்காவில் கூட கண்டுபிடிக்கப்பட்டது இல்லை. அவ்வாறு வழங்கபட்ட பொங்கல் பரிசில் 1,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து செய்த முதல் ஊழல் அதுதான் அதை எதிர்த்து அதிமுக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் திமுக அரசை என்று பிடிக்க வேண்டுமோ அன்று அதிமுக அரசு பிடிக்கும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications