எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தது இதற்காகத்தான்.. அமைச்சர் பொன்முடி விமர்சனம்
விழுப்புரம்: அதிமுகவில் நடைபெறும் உள்கட்சி பிரச்சினைகளுக்காகத்தான் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருப்பதாக விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விமர்சித்தார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, போதை கலாசாரம் அதிகரித்துள்ளது, பல துறைகளிலும் முறைகேடுகள் அதிகரித்துள்ளன என்று புகார் மனுவையும் தமிழக ஆளுநரிடம் எடப்பாடிபழனிசாமி அளித்தார்.
இதுதான் சொல்லாததையும் செய்வதா? துறையை விட்டுவிட்டு சினிமா பார்க்கும் அமைச்சர்.. விளாசிய அதிமுக மாஜி!
போதைப்பொருள் விற்பனை நடக்கிறது
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகத்தில் மாண்வர்களிடம் போதைப்பழக்கம் அதிகரித்து உள்ளது. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. அனைத்து துறைகளில் லஞ்சம் உள்ளது.
புளுகு மூட்டைகள் அடங்கிய கோரிக்கை
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை மாநில அரசு பறிக்கும் வகையில் செயல்படுகிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதராமற்றவை என்று திமுக பதிலடி கொடுத்தது. இது தொடர்பாக நேற்று முன் தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "எடப்பாடி பழனிசாமி பொய்களின் மொத்த உருவமாக, புளுகு மூட்டைகள் அடங்கிய கோரிக்கை மனுவை ஆளுநரிடம் அளித்து இருக்கிறார்.
தனக்கு சாதகமான நிலையை உருவாக்க
அதிமுகவை யார் கைப்பற்றுவது என்ற பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் உடன் தன்னை இணைக்க அப்போதிருந்த ஆளுநர் சமரச உடன்படிக்கையை ஏற்படுத்தியது போன்று, தற்போது அதிமுகவில் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டா போட்டியில் தனக்கு சாதகமான நிலையை உருவாக்க ஆளுநரை சந்தித்து முறையிட்டாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது" என்று சாடியிருந்தார்.
அமைச்சர் பொன்முடி பேச்சு
இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தது உள்கட்சி பிரச்சினைக்காகத்தான் என்று சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வேம்பியில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் அரசு நலத்திட்டங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்முடி கூறியதாவது:-
உள்கட்சி பூசலை சரி செய்ய
எடப்பாடி பழனிசாமி என்ன வேண்டுமானாலும் கூறுவார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறிய இவரெல்லாம், ஆளுநரை பார்த்தது முக்கியமானதா... எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை பார்த்தது கட்சி பிரச்சினைக்காகத்தான். ஆளுநரிடம் இதை சொல்லி அதன்மூலமாக உள்துறை அமைச்சரிடம் கூறி உள்கட்சி பூசலை சரி செய்ய முடியுமா என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி போனார். அங்கு சென்றால் அரசியல் பேசவேண்டுமே என்பதற்காக இதையெல்லாம் பேசியிருக்கிறார்" என்றார்.