ஆரோவில்லில் அடிதடி.. வெளிநாட்டினர்-உள்ளூர் மக்கள் இடையே மோதல்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் நிலப்பிரச்சனை தொடர்பாக ஆரோவில்லில் வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்கள் இடையே ஏற்பட்ட மோதல் கைக்கலப்பாக மாறியது. இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில் உள்ளது. இங்கு பல்வேறு நாட்டில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர்.
இங்கு ஆரோவில் பவுண்டேஷன் சொந்தமாக பல நூறு ஏக்கர் பரப்பளவுக்கு நிலம் வைத்துள்ளார். இதன் அருகே ஏராளாமான நிலம் தனியாருக்கு சொந்தமாக உள்ளது.

நிலப்பிரச்சனை
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் 2 ஏக்கர் நிலம் வாங்கினார். இந்த இடம் ஆரோவில்லுக்கு சொந்தமான என அங்கு வசித்து வரும் வெளிநாட்டினர் கூறினர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.

நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே போலீசார் சென்று இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் வெளிநாட்டினர் ஆரோவில் வாசிகள் நீதிமன்றத்திற்கு சென்று தடை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆரோவில் பக்கம் போதிய ஆதராம் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்தார்.

வேலி அமைப்பதில் வாக்குவாதம்
இந்நிலையில் சுப்பிரமணி என்பவர் வாங்கிய தனது நிலத்தை பாதுகாக்க முடிவு செய்தார். அதன்படி நிலத்தை சுற்றி வேலி அமைக்க திட்டமிட்டார். இன்று அவரது தரப்பினர் நிலத்தை சுற்றி வேலி அமைக்க முயன்றனர். இதற்கு வெளிநாட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அங்கு திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கைக்கலப்பு-போலீஸ் குவிப்பு
இதனால் தனியார் இட உரிமையாளர் தரப்புக்கும் ஆரோவில்லில் வெளிநாட்டு மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கைக்கலப்பு ஏற்பட்டு சிலர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் ஆரோவில் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து சென்று இருதரப்பையும் பேசி சமாதானம் செய்தனர். மேலும் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications