விழுப்புரம் அருகே திடீர் துப்பாக்கிச் சூடு... கிராம மக்கள் சாலை மறியல்... பதற்றம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள வீராமூர் ஏரிப் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் 5 மாட்டுவண்டிகளில் அதிகாலை 3 மணி அளவில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் 4 பேர், ஏரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த மாட்டுவண்டி நோக்கி நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், அச்சமடைந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு உயிர் பயத்தில் தப்பி ஓடி அருகாமையிலிருந்த கரும்பு தோட்டத்தில் பதுங்கி உள்ளனர். இதையடுத்து அதிகாலை 6 மணியளவில் மாட்டுவண்டி இருக்கும் இடத்தில் வந்து பார்த்த போது காளை மாட்டின் வாயில் குண்டடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களிடம் சமாதானம் பேசி, துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications