"ஜனவரி 20" ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்.. விசிகவை தொடர்ந்து சிபிஎம் அறிவிப்பு!
விழுப்புரம்: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சில வார்த்தைகளை விடுத்தும், சேர்த்தும் வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து ஜனவரி 20ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஏற்கனவே விசிக சார்பாக ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை செய்யப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் தமிழ்நாட்டின் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க மறுத்து கடந்து சென்றார். அதேபோல் சில வாசகங்களை அவராகவே சேர்த்து உரையாற்றினார்.

ஆளுநர் மாளிகை முற்றுகை
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி, வரும் 20ம் தேதி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக ஆளுநர் தமிழக மக்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், அரசியல் சாசனத்திற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து மாநில அரசை கொச்சைப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஆளுநர் உரை
இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விரோத கருத்துகளை ஆளுநர் தெரிவித்து வரும் அவர், ஆர்எஸ்எஸ்சின் அடிமட்ட தொண்டரைப் போல செயல்பட்டு அரசியல் நாகரிகம், பண்பாடு இல்லாமல் சட்டசபையில் நடந்துகொண்டுள்ளார். இந்தியாவில் எந்த ஆளுநரும் செயல்படாத வகையில் ஆளுநர் சட்டசபையில் அறிக்கையில் தமிழ்நாடு என்று படிக்காமல் தமிழகம் என்று படித்து அரசு தயாரித்த அறிக்கையை முழுமையாக படிக்காமல் சென்றுள்ளார். மாநில சுயாட்சி, கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்.

அதிமுக மீது விமர்சனம்
ஆளுநரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும். அமைச்சரவையை அவமானப்படுத்தும் செயலாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது. ஆளுநர் நடந்து கொண்ட செயல்பாட்டில் முதல்வரின் நடவடிக்கை கூட்டாட்சியின் தத்துவத்தினை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆளுநரை கண்டிக்க மறுத்து, பாஜகவின் கொத்தடிமையாக இருப்பதைக் காட்டுகிறார்.

அண்ணாமலை மீது விமர்சனம்
ஊழல் எல்லா இடத்திலும் நடைபெறுகிறது. திமுக ஊழல் செய்தால் கண்டிப்பாக கூட்டணி கட்சியாக உள்ள நாங்கள் எதிர்ப்போம். பாஜக தலைவர் அண்ணாமலை எப்படி ரபேல் கைக்கடிகாரம் வாங்கினேன் என்று சொல்லமுடியாமல், தமிழக அரசின் பல துறைகளில் ஊழல் செய்வதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறுவதற்கு, அவருக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றினால் நல்லதாக இருக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications