தொண்டர்களால் திணறும் விக்கிரவாண்டி.. தவெக முதல் மாநில மாநாடு தொடங்கியது! என்ட்ரி கொடுக்கும் விஜய்
விழுப்புரம்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரமாண்டமாக தொடங்கி உள்ளது. ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் நடிகர் விஜய் சிறப்புரையாற்றி கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார். விஜயின் இந்த மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதோ வாரார்.. இதோ வாரார் என்று நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்த விவாதம் என்பது கடந்த ஜனவரி மாதம் வரை தமிழகத்தில் ஹாட் டாபிக்காக இருந்தது. இதனை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்தார். பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் என்ட்ரியை உறுதி செய்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்த கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி தொடங்கியபோதே விஜய் ஒன்றை தெளிவுப்படுத்தினார். தனது இலக்கு என்பது 2024ல் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் இல்லை. 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தல் தான் என்று.
அதோடு முழுநேர அரசியல்வாதியாகும் வகையில் நடிகர் விஜய் சினிமாவை கைவிடுகிறார். தற்போது எச் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு அவர் திரைத்துறையை விட்டு முழுநேரமாக அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இதற்கிடையே தான் 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நடிகர் விஜய் தனது கட்சியை கட்டமைத்து வருகிறார். மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம், கட்சியில் தொண்டர்கள் சேர்ப்பு, கட்சி கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகம் செய்தது என்று அடுத்தடுத்து நடிகர் விஜய் தனது அறிவிப்புகளை செய்து வந்தார்.
இதன் அடுத்த கட்டமாக நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநில மாநாட்டை இன்று நடத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி சாலையில் அரசியல் மாநாடு தொடங்கி உள்ளது.சற்று நேரத்தில் நடிகர் விஜய் பங்கேற்று 100 அடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்ற உள்ளார். அதன்பிறகு நிர்வாகிகள் பேச உள்ளனர். மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் பேச உள்ளார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி 8 மாதங்கள் ஆனாலும் கூட அவரது கொள்கைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இன்று நடக்கும் மாநாட்டில் விஜய் கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார். அதோடு அவரது கட்சி கொள்கை எப்படி உள்ளது? மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தை ஆளும் திமுகவில் யாரை எதிர்க்க உள்ளார்? என்பதை அறிய அரசியல்வாதிகள் உள்பட சாமானியன் வரை அனைவரும் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
நடிகர் விஜயின் இன்றைய மாநாட்டுக்கு 60 அடி அகலம், 170 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கில் மொத்தம் 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேடைக்கு முன் நுழைவாயில் வரை விஜய் உள்ளிட்ட விஐபிக்கள் மேடைக்கு வருவதற்கு ஆடியோ லான்ச்சில் வருவது போல் நடைபாதையும் தனியே ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேடையில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்து சென்று ரசிகர்களை சந்திக்கும் வகையில் ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடக்கும் இடத்தில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், விஜய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளான வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.அதேபோல் தமிழன்னை, சேர, சோழ, பாண்டியர் மன்னர்கள் மற்றும் விஜய் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் சிரமமின்றி மாநாட்டை பார்க்க 40 எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்காக ஐ.ஜி அஸ்ராகார்க், விழுப்புரம் சரக டிஐஜி திஷாமித்தல் தலைமையில் விழுப்புரம் எஸ்பி தீபக்சிவாச் உள்ளிட்ட 10 எஸ்பிக்கள், 50 டிஎஸ்பிக்கள், 150 இன்ஸ்பெக்டர்கள் என 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications