3 நாளாக வயிற்றுப்போக்கு! கஞ்சி குடிக்காமல் பாக்கெட் பாக்கெட்டாக நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பலி!
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதால், அது செரிமானம் ஆகாமல் 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நூடுல்ஸ் அதிகம் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தும் நிலையில், இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதே இச்சம்பவத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் (24), ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக நூடுல்ஸை விரும்பிச் சாப்பிட்டுள்ளார்.

இதனால், அன்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மனோஜின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், மனோஜ் மூன்று தினங்களாக வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அதுபோல், கடந்த 2019ஆம் ஆண்டு புதுச்சேரியிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. குயவர்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27), புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
வழக்கம் போல் பணிக்குச் சென்ற மணிகண்டன், அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நூடுல்ஸ் வாங்கிச் சாப்பிட்டுள்ளார். நூடுல்ஸில் பாதி மட்டும் இரவு சாப்பிட்ட மணிகண்டன், மீதியை அடுத்த நாள் காலை சாப்பிட்டுள்ளார்.
அப்போது மணிகண்டனுக்கு வாந்தி மற்றும் பயங்கர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே, மணிகண்டனுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் அவரைப் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். கெட்டுப்போன நூடுல்ஸை சாப்பிட்டதால்தான் மணிகண்டன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல், அண்மைக்காலமாக ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. கெட்டுப்போன சிக்கன் மற்றும் சிக்கன் உணவுகளைச் சாப்பிட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
பொதுவாக, வயிறு சரியில்லாத நேரத்தில் வெறும் அரிசிக் கஞ்சியையோ அல்லது மோர் சாதத்தையோ உண்ண வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரை. இல்லாவிட்டால், இட்லியுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். காபி, டீ குடிக்கக் கூடாது. இப்படியிருக்கும்போது, அந்த இளைஞர் நூடுல்ஸை ஏன் சாப்பிட்டார், அவரை யாரும் தடுக்கவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.












Click it and Unblock the Notifications