ரோட்டை பார்க்காமல்.. மேப்பை பார்த்த சென்னை இளைஞர்! கழிவுநீர் கால்வாயில் பாய்ந்த கார்! பரிதாபம்
கள்ளக்குறிச்சி: கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ஒருவர் இரவு நேரத்தில் கூகுள் மேப்பை பார்த்தவாறே ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
நாம் அனைவரது போனிலும் பல செயலிகள் இருந்தாலும் கூட கூகுள் மேப் செயலி நிச்சியம் இடம் இருக்கும்.! புதிய ஊருக்கோ அல்லது புதிய ஏரியாவுக்கோ செல்லும் போது கூகுள் மேப் தான் கை கொடுக்கும்.
பல நேரங்களில் கூகுள் மேப்பின் செயல்பாடுகள் சரியாகவே இருக்கும். ரியல் டைம் டிராபிக் எனப்படும் தற்சமய போக்குவரத்து நெரிசலையும் கூகுள் மேப் கணக்கிட்டு வழியைச் சொல்லும்.
முக்காபுலா பிரபுதேவா மாதிரி.. தலை இல்லாமல் ஊர் சுற்றிய உருவம்.. ஷாக் தந்த கூகுள்மேப்!
கூகுள் மேப்
இதனால் நாம் வழக்கமாகச் செல்லும் வழி என்றாலும் கூட, சீக்கிரம் செல்லும் பாதையைக் கண்டறிய இது பயன்படும். இல்லையென்றால் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது, யாரிடமாவது வழி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். சிலர் வழி தெரியாமலேயே உளறியும் விடுவார்கள். அது நம்மை சுத்தலில் விடும். இதுபோன்ற சம்பவங்களைக் கூகுள் மேப் முற்றிலுமாக நீக்கிவிட்டது. அதேபோல தினந்தோறும் அதிக தூரம் பயணிக்க கார் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்களக்கும் கூகுள் மேப் செயலி ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லலாம்.
கமெடி
அதேநேரம் கூகுள் மேப்பை பார்த்து அப்படியே நூல் பிடித்துப் போலச் சென்று முட்டுச் சந்தில் முட்டிக் கொள்வது, பாதி முடிக்கப்பட்ட பாலத்தில் மீது நிற்பது போன்ற காமெடி நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.. அதுவும் நம்ம தமிழகத்தில் நடந்துள்ளது. கோயிலுக்குச் செல்ல வேண்டும் என பக்காவாக கிளம்பிய அவர்கள் கடைசியாக எங்குச் சென்றுள்ளனர் என்பதைப் பார்த்தால் காமெடி தான்.
கோயில்
சென்னை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் மடத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு கீழையூர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார். கூகுள் மேப் உதவியுடன் தான் இந்த கோயிலுக்கே அவரால் செல்ல முடிந்துள்ளது. சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தபோவனம் மடத்திற்குச் செல்ல கூகுள் மேப்பையே பயன்படுத்தியுள்ளார்.
குழப்பம்
கோயிலில் இருந்து நேராகப் போய், வலது புறம் இருக்கும் பாலத்தில் திரும்ப வேண்டும் என்று கூகுள் மேப் சொல்லியுள்ளது. இருப்பினும், இதை ஸ்ரீராம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. மெயின் ரோட்டிற்கு பதிலாகப் பதிலாகத் தென் பெண்ணை ஆற்றலுக்குச் செல்லும் குறுகிய சாலையில் காரை விட்டுள்ளார். மேப்பில் நாம் தப்பான பாதையில் சென்றால் அப்டேட் ஆக கொஞ்ச நேரம் ஆகும். இதனால் மேப்பில் அவர் செல்வது தவறான பாதை என்பது அப்டேட் ஆகவில்லை. இருந்த போதிலும், காரை ஓட்டிய ஸ்ரீராம் ரோட்டை பார்க்காமல், கூகுள் மேப்பிலேயே கண்ணை வைத்து வாகனம் ஓட்டியுள்ளார்.
கால்வாயில் பாய்ந்த கார்
அப்போது திடீரென எதிர்பாராத விதமாகக் குறுகிய சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கி உள்ளது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த அனைவரும் சிறிய காயங்கள் கூட இல்லாமல் தப்பினர். இருப்பினும், கழிவு நீர் வாய்க்காலில் இறங்கியது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர், கார் கிரேன் உதயோடு மீட்கப்பட்டது. கூகுள் மேப் பார்த்தவாறு தவறான பாதையில் சென்றதால் கார் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.