என்னடி மீனாட்சி.. சொன்னது என்னாச்சு? திமுக சாயம் வெளுத்துருச்சு - அட்டாக் மோடில் டிடிவி தினகரன்!
விருதுநகர் : தி.மு.கவின் சாயம் ஒரு வருடத்தில் வெளுத்து விட்டது. அவர்கள் கொடுத்த வாக்குறுதி "என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு" என்ற பாடலுக்கு ஏற்ப உள்ளது என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உரையாற்றினார்.
அப்போது பேசிய டி.டி.வி.தினகரன், அதிமுக உடன் நாங்கள் இணைய வாய்ப்பே இல்லை, அதிமுவை மீட்டெடுப்பதே லட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், "ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்குப் பின் எந்த தேர்தலிலும் நாம் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் ஜெயலலிதாவின் கொள்கைகளையும், லட்சியங்களையும் தொடர்ந்து மக்களிடையே எதையும் எதிர்பார்க்காமல் எடுத்துச்செல்லும் இயக்கமாக இருக்கிறது அமமுக.

ஊழல் ஆட்சி
ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி ஆட்சி வியாபார நோக்கத்துடன் செயல்பட்டு வந்தார். எடப்பாடி பழனிசாமியின் ஊழல் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப்போறாரு என்று ஆட்சிக்கு வந்த பின்பாக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கூடவே மின்தடையும் வந்துவிடும்.

துரோக சக்தியை வெல்வோம்
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர தமிழ்நாடு முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் வலம் வருவேன். ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரும் வரை ஓயமாட்டோம். இழந்த இயக்கத்தை ஜனநாயக முறையில் மீட்டெடுப்போம். நாசகார சக்திகள் எங்களைப் பார்த்து தீய சக்தி என்கிறது. அந்த துரோக சக்தியை வென்று நிச்சயம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தொண்டர்கள் உள்ளவரை
தொண்டர்கள் இருக்கும் வரை தினகரன் தோற்க மாட்டார், காணாமல் போகமாட்டார். இறப்பது ஒரு முறை வாழ்வது ஒரு முறை என்ன வருகிறது என்று பார்த்து விடலாம். யாரைப் பார்த்தும் எனக்குப் பயம் இல்லை. அம்மா ஆட்சி வரும் வரை ஓயமாட்டேன். அதிமுக உடன் நாங்கள் இணைய வாய்ப்பே இல்லை, அதிமுவை மீட்டெடுப்பதே லட்சியம்.

சொன்னது என்னாச்சு?
திமுகவின் சாயம் ஒரு வருடத்தில் வெளுத்து விட்டது. அவர்கள் கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று? என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு என்று பாடலுக்கு ஏற்ப திமுக உள்ளது. பாரத பிரதமர் வந்து கலந்து கொண்ட மேடையை அரசியல் மேடையாக்கி விட்டார் ஸ்டாலின். மத்திய அரசை கண்டு திமுக பயப்படுகிறது." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications