“கூட்டணிக்குள் புது பஞ்சாயத்து” கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது வழக்குப்பதிவு.. அமைச்சருக்கு தொடர்பு?
விருதுநகர்: ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் மணல் கடத்தியதாக சில நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் சி.பி.ஐ கட்சியின் சேத்தூர் நகர செயலாளர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து அக்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட்
மேலும், சி.பி.ஐ நிர்வாகி மீதான வழக்குப்பதிவுக்கு திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனே காரணம் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் சமீபத்தில் வருவாய்த் துறையினர் சோதனை செய்ததில் சேத்துார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜாவிற்கு சொந்தமான இடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.18 லட்சம் மதிப்பிலான 183 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. சி.பி.ஐ கட்சி நிர்வாகி ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திட்டமிட்டு வழக்கு
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகியான ராஜா மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜபாளையம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ தங்கபாண்டியன் உள்ளிட்ட தி.மு.கவினர் தலையீட்டின் பேரிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
சி.பி.ஐ நிர்வாகி ராஜா மீது நடவடிக்கை எடுத்த வருவாய்த்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் சேத்துார் பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.பி.ஐ மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் பகவத் சிங், நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சருக்கு தொடர்பு
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம், ராஜாவுக்கு சொந்தமான இடத்தை சீல் வைத்த விவகாரத்தில் தி.மு.க எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு மறைமுகமாக தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கிறோம் எனக் குற்றம்சாட்டினார்.
தொழில் போட்டி
மணல் விற்பனை விவகாரத்தில் திமுகவினருக்கு தொழில் போட்டியாக சி.பி.ஐ நிர்வாகி இருந்ததால் அவரைப் பற்றி வருவாயத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் திமுகவினர் புகார் அளித்து, அவர் உத்தரவின்பேரிலேயே வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல், ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ மாநில நிர்வாகிகள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகின்றனராம்.