நீ என் வீட்டிலேயே தங்கு சாமி.. எப்போதும் முதல்வரிடம் கூறும் பிரதமர் மோடி.. துரைமுருகன் சுவாரஸ்யம்
விருதுநகர்: டெல்லி வந்தால் என் வீட்டில் தங்குங்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்கிறார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் துரைமுருகன் பேசுகையில் கழகத்தில் உழைத்தவர்களுக்கு விருது வழங்கும் பழக்கத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார். அந்த பழக்கத்தை விடாமல் செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த விருதுகளுக்கு யார் உகந்தவர்கள் என ஸ்டாலின் தேர்வு செய்து எங்களிடம் அறிவித்த போது திருத்தமே சொல்ல முடியாத அளவுக்கு அவரது தேர்வு இருந்தது.
இதுதான் கருணாநிதியின் பாணி. அந்த பாணியை அப்படியே ஸ்டாலினும் கடைப்பிடித்திருக்கிறார். இந்த ஆட்சி ஓராண்டு ஆன போதிலும் யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடத்தி கொண்டு வருகிறார். ஒரு தலைவன் கட்சிக்கும் தலைவனாக இருந்து ஆட்சிக்கும் தலைவனாக இருந்து நடத்துவது சாதாரணமானதல்ல. இது கருணாநிதிக்கு கை வந்த கலை.
வச்ச கண் வாங்காமல் பார்த்த ஸ்டாலின்.. 21 கி.மீ தூரம்.. 'கொடி பறக்குதா?’ - மேடையில் 'செம’ உற்சாகம்!
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் ஆட்சியில் கவனம் செலுத்தினார்கள், கட்சியை கோட்டை விட்டார்கள். ஆட்சி கவிழ்ந்தது. பீகாரிலும் ஆட்சியில் கவனம் செலுத்தினார்கள், லாலுவின் ஆட்சி கவிழ்ந்தது. கட்சியையும் ஆட்சியையும் திறமையாக நடத்துவதால்தான் ஸ்டாலினின் ஆட்சியை கண்டு அகில இந்தியாவே புகழ்கிறது. அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்திற்கு சென்ற பிறகுதான் அவருடைய அறிவாற்றலை கண்டு அத்தனை பேரும் வாய் பிளந்து நின்றார்கள். நீண்ட காலம் அவர் டெல்லி வாசத்தில் இல்லை.
கருணாநிதி முதல்வர்
கருணாநிதி முதல்வரானது முதல்முறையாக டெல்லிக்கு மொரார்ஜி தேசாயை பார்க்க செல்கிறார். மாலை 5 மணிக்கு கருணாநிதிக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அவர் 10 நிமிடங்கள் தாமதமாக போகிறார். அவரை மொரார்ஜி தேசாய் வரவேற்காமல் நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா, உனக்காக காத்து கொண்டிருப்பதற்கு என்று எடுத்தவுடனேயே கருணாநிதியிடம் நெருப்பை கொட்டியிருக்கிறார்.
கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா
அப்போது கருணாநிதி சொன்னார், அந்த நாற்காலியில் உட்கார கூட எனக்கு மனமில்லை. நெருப்பின் மீது அமர்ந்தது போல் இருந்தது. அடுத்த கேள்வியாக மொரார்ஜி கேட்டாராம், எங்கே வந்திருக்கிறீர்கள் என ! அதற்கு கருணாநிதி ,நீங்கள் நிதியமைச்சர் என்பதால் நிதி கேட்க வந்திருக்கிறேன் என்றாராம். அதற்கு மொரார்ஜி , நிதி எங்கே கொட்டி கிடக்கிறது. என் வீட்டு தோட்டத்தில் பணம் காய்க்கும் மரமா இருக்கிறது, உனக்கு பறித்து கொடுப்பதற்கு என கேட்டுள்ளார்.
பணம் காய்க்கும் மரம்
அதற்கு கருணாநிதி சொன்னார்,- பணம் காய்க்கும் மரமே உலகத்தில் இல்லை. பிறகு உன் தோட்டத்தில் எப்படி இருக்கும் என கருணாநிதி கேட்ட போதுதான் இவரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மொரார்ஜி நினைத்தார். பிறகு குடியரசுத் தலைவர்களை தேர்வு செய்வது கருணாநிதியால்தான் முடியும் என்பதை இந்தியாவே ஒப்புக் கொண்டு விட்டது.
கண்ணியம் பண்பாடு
இந்தியாவில் இருக்கும் முதல்வர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின் என்ற பெயர் இருக்கும். நமக்கும் பாஜகவுக்கும் ஆயிரம் வேற்றுமை இருக்கும். ஆனால் பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலினை பார்க்கும் போதெல்லாம் சொல்வார்- கட்சி அரசியல் இருக்கட்டும் சாமி, உன்னை எனக்கு பிடிக்கிறது. நீ வந்தால் என் வீட்டிலேயே தங்கு ,உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று பிரதமர் சொல்லும் அளவுக்கு முதல்வரின் கண்ணியம் பண்பாடு தலைதூக்கி நிற்கிறது.
60 ஆண்டுகளுக்கு கவலையில்லை
இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது. தினந்தோறும் ஒரு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். ஆட்சியையும் செம்மையாக நடத்துகிறார், கட்சியையும் கட்டுக்கோப்பாக நடத்துகிறார். இனி இது திராவிட மாடல் ஆட்சி. இன்னும் 60 ஆண்டுகளுக்கு இந்த இயக்கத்திற்கு பயமில்லை என துரைமுருகன் தெரிவித்தார்.