பாஜக வளர்வது ஹேப்பி.. சட்டென பாசம் காட்டிய மாஃபா பாண்டியராஜன்.. தடதடக்கும் அதிமுக.. அப்போ அதானா?
விருதுநகர் : அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாஜக தமிழகத்தில் வளர்வது மகிழ்ச்சி எனக் கூறியுள்ளது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வரும் மாஃபா பாண்டியராஜன், பாஜகவை உயர்த்திப் பிடிப்பது போல் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அவரது தலைமையை ஏற்றுக்கொண்டார்.

பாஜக அபிமானம்
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு தாவுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்களில் முதன்மையான அதிமுககாரர் மாஃபா பாண்டியராஜன். அந்தளவுக்கு பாஜக சார்பான கருத்துகளைப் பேசக்கூடியவர். இதன் காரணமாக அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவார். அதிமுகவில் இருக்கும் பாஜக காரர் என்றே இவரை திமுகவினர் பலரும் விமர்சிப்பது வழக்கம்.

ஆர்ப்பாட்டம்
இவர் தற்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ் மோதல் நிலவும் சூழலிலும், பாஜகவை விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரியாபட்டியில் மின் கட்டண உயர்வை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார்.

பாஜக வளர்வது மகிழ்ச்சி
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "பா.ஜ.க எங்களின் தோழமைக் கட்சி. அவர்களின் செயல்பாடு நன்றாக உள்ளது. தோழமைக் கட்சி தமிழ்நாட்டில் வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சி தான். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

சலசலப்பு
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக நாங்களே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என பாஜகவினர், அதிமுகவை சீண்டியது சில வாரங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், பாஜகவின் வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சி என மாஃபா பாண்டியராஜன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு தூது?
இதனால் அதிருப்தி அடைந்துள்ள மாஃபா பாண்டியராஜன், பாஜகவுக்கு செல்வதற்காக தூண்டில் போட்டு பார்க்கிறாரா என அதிமுகவினரே முணுமுணுத்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியே, பாஜக ஆதரவைப் பெற முயற்சித்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர் பாஜகவை உயர்த்திப் பிடித்துப் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Recommended Video

மீண்டும் பாஜக
தொழிலதிபராக இருந்து அரசியலுக்கு வந்தவர் மாஃபா பாண்டியராஜன். பாஜகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் தேமுதிகவில் இணைந்த மாஃபா எம்.எல்.ஏ ஆனார். அங்கிருந்து அதிமுகவிற்கு வந்து மீண்டும் சீட் கிடைத்து வென்று அமைச்சரானார். இந்நிலையில், மாஃபாவின் பேச்சு மீண்டும் அவர் பாஜக பக்கமே செல்வதற்கான சிக்னல் என்கிறார்கள் அதிமுகவினர் சிலரே.












Click it and Unblock the Notifications