13 மணி நேரம் டிராவல்.. கிளம்பிய ஊரிலேயே பயணிகளை இறக்கிவிட்ட விமானம்.. நொந்து போன பயணிகள்.. என்னாச்சு?
துபாயில் இருந்து ஆக்லாண்டிற்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் 13 மணி நேர பயணத்திற்கு பிறகு துபாய் விமான நிலையத்திற்கே திரும்பியுள்ளது.
வாஷிங்டன்: துபாயில் இருந்து ஆக்லாண்டிற்கு புறப்பட்ட பயணிகள் விமானம் 13 மணி நேரம் பயணத்திற்கு பிறகு மீண்டும் துபாய் விமான நிலையத்திலேயே தரையிறங்கியுள்ளது. இதனால் வெறுத்துப் போன மனநிலையுடன் பயணிகள் விமானத்தை விட்டு இறங்கியுள்ளனர். எதற்காக விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது என்ற விவரத்தை இங்கே காணலாம்.
பயணங்கள் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது. அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக எங்காவது பயணித்துக் கொண்டுதான் இருப்போம்.
கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு என பல நுற்றுக்கணக்கான மைல்கள் கூட பயணிக்க வேண்டிய நிர்பந்தம் பலருக்கும் தற்போதைய கால கட்டத்தில் உள்ளது. விமானம், பேருந்து, ரயில் என பலவற்றிலும் பயணிக்கிறோம்.

சுவாரசிய பயணங்கள்
இப்படி நாம் மேற்கொள்ளும் இந்த பயணத்தில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் நடக்கும். சில நேரங்களில் ஏன்.. இப்படி நடக்குது என நொந்து போகும் அளவுக்கு கூட சில சம்பவங்கள் நடந்து விடும். ஆனாலும், பயணங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில நேரம் தாமதம் ஆகிவிடுகின்றன. இதனால், பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டால் அதை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை. இதல்லாம் இருக்கட்டும்.. நாம் இங்கு விஷயத்திற்கு வருவோம்...

புறப்பட்ட இடத்துக்கே வந்த விமானம்
துபாயில் இருந்து நியூசிலாந்து புறப்பட்ட ஒரு விமானம் 13 மணி நேரம் கழித்து மீண்டும் துபாய்க்கே வந்து சேர்ந்துள்ளது. பயணிகள் பலரும் நியூசிலாந்திற்குதான் வந்து சேர்ந்து விட்டோம் என நினைக்க மறுபடியும் துபாய் விமான நிலையத்திலேயே இறக்கி விட்டு இருக்கிறது. வழக்கத்திற்கு மாறான இந்த நிகழ்வு குறித்த விவரத்தை காணலாம். துபாயில் இருந்து EK448 என்ற எமிரேட்ஸ் விமானம் கடந்த 29 ஆம் தேதி நியூசிலாந்தின் ஆக்லாண்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

13 மணி நேரம் பயணித்த பயணிகள்
9 ஆயிரம் மைல் தூரம் கொண்ட இந்த தொலைவை கடக்க சுமார் 17 மணி நேரம் விமானத்தில் பயணிக்க வேண்டியிருக்கும். இந்த விமானம் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்டு பாதி தூரம் சென்ற நிலையில், திடீரென யூடேர்ன் அடித்துள்ளது. சுமார் 13 மணி நேரம் விமானம் பயணித்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு மீண்டும் துபாய் சர்வதேச விமான நிலையத்திலேயே தரையிறங்கியுள்ளது. நியூசிலாந்தில் தான் தரையிறங்குவோம் என்ற கனவுகளுடன் பயணித்த பயணிகள் இதனால், ஏகத்திற்கு கடுப்பாகியிருப்பார்கள் தான் என்பதுதான் நிதர்சனம்.

விமான நிலையம் முழுவதும் தண்ணீர்
ஆனாலும் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று விமான நிறுவனம் பயணிகளுக்கு தெரிவித்து இருக்கிறது. ஏனென்றால் நியூசிலாந்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழையால் ஆக்லாண்டு விமான நிலையம் வெள்ளக்காடாகியுள்ளது. விமான நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் விமான நிலையம் ஆக்லாந்தில் மூடப்பட்டுள்ளது. இதனால்தான் வேறு வழியின்றி விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளது.

பாதுகாப்பு மிகவும் முக்கியமானது
13 மணி நேரம் பயணித்த பிறகு புறப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து விட்டு இருக்கிறார்களே என மனதிற்குள் நினைத்தாலும் இதில் யாரை சொல்லியும் குற்றமில்லை என்று சொன்னபடியே விமானத்தை விட்டு இறங்கியிருக்கிறார்கள். ஆக்லாந்து விமான நிலைய அதிகாரிகளும் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், இது கண்டிப்பாக கடுமையான அதிருப்தியை கொடுப்பதாகவே இருக்கும். ஆனால், பயணிகள் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை முழுவதும் ஆக்லாந்து விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்தில் வெள்ளம் வடிந்த பிறகு விமான சேவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications