மயானத்திற்கு சென்று பாருங்கள் உண்மை தெரியும்- கொரோனா உயிரிழப்பை விமர்சித்த டிரம்பிற்கு பவுசி பதிலடி
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் மிகைப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறியதற்கு, அந்நாட்டின் தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குநர் ஆண்டனி பவுசி பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு ஃபைசர், மாடர்னா ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தற்போது வரை கொரோனா பாதிப்பு அங்குக் குறையவில்லை. சராசரியாக கொரோனாவால் 2000 முதல் 3000 பேர் வரை உயிரிழக்கின்றனர். அங்கிருக்கும் பல மயானங்கள் நிறைந்துவிட்டதால், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கூட புதைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு மிகைப்படுத்தப்படுகிறது
இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தீவிர தன்மை குறித்து தகவல்களைத் தொடர்ந்து குறைத்துக் கூறி வரும் அதிபர் டிரம்ப், கொரோனா உயிரிழப்புகளைப் போலியானவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "இந்த சீனா வைரசின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அமெரிக்காவில் மிகைப்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நோய் கட்டுப்பாட்டு அமைப்பு மிகவும் அபத்தமான முறையில் உயிரிழப்புகளைக் கணக்கிடுகிறது. இங்கு ஒரு மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அது கொரோனா உயிரிழப்பாகக் கருதப்படுகிறது" என்றார்.
போலியானவை அல்ல
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டிற்கு அந்நாட்டின் தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குநர் ஆண்டனி பவுசி பதிலளித்துள்ளார். "இந்த உயிரிழப்புகள் உண்மையானவை. மருத்துவமனைகளில் நமது சுகாதார ஊழியர்கள் ஆற்றும் சேவைகளைப் போலியானவை அல்ல, உண்மையானது" என்றார்.
மயானங்களுக்குச் சென்று பாருங்கள்
தொடர்ந்து உயிரிழப்புகள் குறித்துப் பேசிய அவர், "நாடு முழுவதும் கொரோனா காரணமாக மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 முதல் 3,000 பேர் உயிரிழக்கின்றனர். இவற்றைப் பொய் என சொல்பவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். மயானங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் சென்று என்ன நடக்கிறது என்று பாருங்கள். அதுதான் உண்மை" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் கொரேனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.94 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பு 2.11 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்பும் 3.60 லட்சத்தைத் தாண்டியுள்ளது.