"ஜஸ்ட் 30 நிமிடம்!" ரஷ்யா நினைத்தால் அவ்வளவுதான்.. அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் காலி! எலான் மஸ்க் பரபர
வாஷிங்டன்: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் தொடர்பாகப் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே உலகிற்கு பொல்லாத காலம் போல! உலக நாடுகள் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வந்த நிலையில், திடீரென உக்ரைன் போர் ஏற்பட்டது. இது இரு நாடுகளை மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
உக்ரைன் போர்
கடந்த சில ஆண்டுகளாகவே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் போக்கு தான் இருந்து வந்தது. இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென கடந்த பிப்.24இல் உக்ரைன் மீது முழு வீச்சில் போரை ஆரம்பித்தது ரஷ்யா.. இதைப் போர் எனக் குறிப்பிட மறுக்கும் ரஷ்யா, தனது எல்லையைக் காக்க எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை என்றே கூறி வருகிறது. உக்ரைன் நேட்டோவில் சேர உள்ளதாகத் தகவல் வெளியானதே, இந்தப் போருக்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
உலக நாடுகள்
உக்ரைன் போர் முதலில் சில நாட்களில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடிய நிலையில், போர் சுமார் ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. இந்தப் போரால் இரு நாடுகள் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கூட பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
தொடரும் போர்
இருந்தாலும் கூட, போர் முடிந்ததாகத் தெரியவில்லை. இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், சில நாட்கள் மட்டுமே எவ்வித தாக்குதலும் நடக்காமல் இருந்தது. பின் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை ஓரம்கட்டிவிட்டு போரைத் தொடங்கின. இந்தப் போர் சமயத்தில் உலக நாடுகள் மட்டுமின்றி தனி நபர்களும் கூட உக்ரைனுக்கு உதவினர்.
எலான் மஸ்க்
இந்தப் போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைனில் பல பகுதிகளில் இனையச் சேவை முடங்கியது. அப்போது உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க் தான் தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இணையச் சேவை கொடுத்தார். இருப்பினும், கடந்த சில காலமாக அவர் கூறும் கருத்துகள் உக்ரைனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ரஷ்யா அத்துமீறி ஆக்கிரமித்த பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது போன்ற கருத்துகளுக்கு உக்ரைன் கடும் எதிர்வினையாற்றியது.
ஆணு ஆயுதங்கள்
நேட்டோ நாடுகள் வரும் திங்கள்கிழமை முதல் அணு ஆயுத போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதை ட்விட்டரில் பகிர்ந்த ஒருவர், "இப்படித்தான் நிலைமை அணு ஆயுதங்களை நோக்கிச் செல்லும். அடுத்து ரஷ்யா தனது அணு ஆயுதப் பயிற்சியை ஆரம்பிக்கும். அதன் பின்னர் நேட்டோ மற்றும் ரஷ்யா தரும் பதிலடி நடவடிக்கைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தான் முடியும்" என்று பதிவிட்டு இருந்தார்.
தொடங்க மாட்டான்
இதற்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதில் தான் இப்போது நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தனது ட்விட்டரில் அவர், "நிச்சயமாக அறிவுள்ள எந்தவொரு மனிதனும் அணு ஆயுதப் போரைத் தொடங்க மாட்டான்.. ஆனால், இதில் பிரச்சினை என்னவென்றால் போதிய அறிவு இருக்கும் எந்தவொரு நபரும் முதலில் போரையே ஆரம்பித்து இருக்க மாட்டார்கள்.
ஜஸ்ட் 30 நிமிடங்கள்
அணு ஆயுத ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை வெறும் 30 நிமிடங்களில் அழிக்கும் திறன் ரஷ்யாவிற்கு உள்ளது. அமெரிக்காவிடமும் இதே திறன் உள்ளது. பலருக்கு இது தெரியாது என்பது ஆச்சரியமான விஷயம். இதைப் பயன்படுத்துவது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் இருப்பதும் முட்டாள்தனமானது தான்" என்று பதிவிட்டு உள்ளார்.