'முன்னாள் அமெரிக்க அதிபர் நான்.. என்னையா பிளாக் பண்ணீங்க..' புலம்பும் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பை அனைத்து சமூக வலைத்தளங்களும் தடை செய்துள்ள நிலையில் TRUTH Social என்ற புதிய சமூக வலைத்தளத்தைத் தொடங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக இருந்த போதே டிரம்பிற்கும் அங்குள்ள பெரிய டெக் நிறுவனங்களுக்கும் எப்போதும் ஒத்து வராது. ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் ட்ரம்ப் தொடர்ச்சியாகச் சர்ச்சைக்குரிய ட்வீட்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதுபோன்ற பதிவுகள் எச்சரிக்கை (Flag) செய்யப்படும். இதனால் டெக் நிறுவனங்களுக்கு மீது கடும் கோபத்தில் இருக்கும் டிரம்ப், பேச்சுரிமைக்கு எதிராக அவை செயல்படுவதாகத் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
சதி செய்துவிட்டனர்.. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வெகு விரைவில் போர்.. டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!
நாடாளுமன்ற வன்முறை
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்க நெருங்க அவரது பேச்சுக்கள் எல்லை மீறியது. அதிபர் தேர்தலில் சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதாகவும் வாக்குப்பதிவில் மாபெரும் மோசடி நடந்துள்ளதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்க அதிபராக ஜோ பைடனை தேர்ந்தெடுக்க ஜனவரி 6ஆம் கேகி நடைபெற்ற நிகழ்வின் போது, டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தனர். இதனால் அங்கு மிகப் பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது.
ட்ரூத் சோஷியல்
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களும் டிரம்பிற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவருக்கே சமூக வலைத்தளங்கள் தடை விதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கடும் கோபமடைந்த டிரம்ப், புதிதாக தனக்கென ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கப்போவதாக அறிவித்திருந்தார். ட்ரூத் சோஷியல் (TRUTH Social) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வலைத்தளத்தின் பீட்டா லான்ச் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
சூப்பர் திட்டம்
டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனம் இந்த ட்ரூத் சோஷியல் நிறுவனத்தை உருவாக்குகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் சாதனங்களில் இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மேலும், இத்துடன் சேர்ந்த நெட்பிளிக்ஸ், ஹோட்ஸ்டார் போன்ற ஓடிடி நிறுவனம் ஒன்றையும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டிரம்ப் பேச்சு
இது குறித்த டிரம்ப் கூறுகையில், "நான் ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளேன். பெரிய டெக் நிறுவனங்கள் பேச்சு உரிமைக்கு எதிராகச் செயல்படுகின்றன. அதை எதிர்க்கும் வகையிலேயே இந்த புதிய சமூக வலைத்தளத்தை நான் தொடங்கியுள்ளேன். ட்விட்டர் தளத்தில் தாலிபான்கள் அதிகளவில் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தடை இல்லை. ஆனால் முன்னால் அமெரிக்க அதிபரான எனக்குத் தடை விதித்துள்ளனர். என்னை அவர்கள் ப்ளாக் செய்துள்ளது ஏற்புடையதல்ல" என்று தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதும் சரி, அதன் பின்னரும் சரி தனது ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருக்க டிரம்ப் ட்விட்டர் தளத்தையே பெரியளவில் பயன்படுத்தி வந்தார். அவரது ட்விட்டர் கணக்கிற்குத் தடை விதிக்கும் வரை, உலக அளவில் அதிக ஃபாளோயர்ஸ்களை கொண்ட ட்விட்டர் பக்கமாக டிரம்பின் பக்கமே இருந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் பலரும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில் இணைவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.