மனிதர்களே பாத்து கத்துக்கிடுங்க.. போக்குவரத்து விதிபடி சாலையை கடக்கும் வாத்துக்கள்.. பரவும் வீடியோ!
வாஷிங்டன்: சாலையில் செல்லும் வாத்துக்கள் சில சாலையை கடக்க முயற்சிக்கும் போது சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் சிறிது நேரம் காத்து நின்று பின்னர் பச்சை விளக்கு எரிந்த பின்னர் சாலையை கடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது போக்குவரத்து என்று சொல்வார்கள். அதன்படி தான் போக்குவரத்து துறையும் அபரிமிதமான வளர்ச்சி கண்டு விட்டது.
இந்தியாவில் பல வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு இருசக்கர வாகனங்கள் இருப்பதை காணலாம். அதேபோல், கார்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டு வருகிறது. இத்தகைய காரணங்களால் சென்னை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை பற்றி சொல்லவே வேண்டாம்.
மாணவர்களுக்கும் 1000 கொடுங்க.. என்ன பாவம் செஞ்சாங்க..? பாகுபாடு வேண்டாம்.. உதயகுமார் வைத்த கோரிக்கை!
போக்குவரத்து விதிமீறல்
அதேபோல், போக்குவரத்து விதிமீறல்களும் அதிக அளவில் நடப்பதை நாம்மால் காண முடியும். என்னதான் போலீசார் கிடுக்கிப்பிடி அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிமீறல்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒரு பக்கம் இளசுகள் சாகசங்கள் என்ற பெயரில் சாலையில் ஆபத்தான வித்தை காட்டுகின்றனர். இது அவர்களுக்கு மட்டும் இன்றி எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது.
விழிப்புணர்வு பிரசாரங்கள்
விபத்துக்களால் விலை மதிப்புமிக்க உயிர் பறிபோவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு பக்கம் விபத்துக்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை ஒழுங்காக மதிக்காமல் செல்வதே காரணம் ஆகும். சில வெளிநாடுகளில் சாலை விதிமீறல்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் அந்த அளவுக்கு கடுமை இல்லை.
வாத்துக்கள் சிக்னலை பார்த்து..
இதனால் போக்குவரத்து விதிமீறல்களும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக சிக்னல்களில் போலீசார் இருந்தால் மட்டுமே கொஞ்சம் மதிக்கின்றனர். ஆனால் போலீசார் இல்லையென்றால், சிக்னல்களை துளியும் மதிக்காமல் பல வாகன ஓட்டிகள் அத்துமீறுகின்றனர். இந்த நிலையில் சிக்னல்களில் நிற்காமல் செல்பவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் வகையில் வாத்துக்கள் சில சிக்னலை பார்த்து சாலையை கடந்து செல்வது பலரையும் வியக்க வைத்துள்ளது.
வாத்துக்கள் கூட
ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், ''வாத்துக்கள் கூட ஒழுக்கத்துடன் போக்குவரத்து விதிகளை பின்பற்றுகின்றன. வாத்துக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வோம்... போக்குவரத்து விதிகளை மதிப்போம்..'' என பதிவிட்டுள்ளார். 27 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் 8 வாத்துக்கள் குடுகுடுவென ஓடி வருகின்றனர். ஒரு சாலையை கடக்க நினைக்கும் போது திடீரென அந்த 8 வாத்துக்களும் சாலையை கடக்காமல் நின்றுவிடுகின்றன.
சாலையை கடக்க
சாலையில் ஒரு கார் சென்றது.. ஓ அப்போ இதனால் தான் அந்த வாத்துக்கள் நின்றதோ என நம்மை ஒரு செகண்ட் நினைக்க வைக்கும் நிலையில், அடுத்த சில நொடிகளில் சாலை காலியாக இருக்கிறது... ஆனால் அப்போதும் வாத்துக்கள் சாலையை கடக்காமல் அங்கேயே நின்றன. ஏன் என பலரும் நினைக்கையில் அந்த வீடியோவை எடுத்தவர் சிக்னலை காண்பிக்கிறார். அதில் சிவப்பு விளக்கு எரிகிறது. இதனால் தான் வாத்துக்கள் சாலையை கடக்காமல் அப்படியே நின்றுள்ளது. பின்னர் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததும் வாத்துக்கள் குடு குடு வென ஓடி சாலையை கடந்து செல்கிறது.
எப்படி தெரிந்திருக்கும்
நெட்டிசன்கள் பலரையும் இந்த வீடியோ வியக்க வைத்துள்ளது. வாத்துக்களின் டஸ்க்... டஸ்க்.. நடையே அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.. அதிலும் மனிதர்கள் கூட பின்பற்ற யோசிக்கும் சாலை விதிகளை வாத்துக்கள் பின்பற்றி சென்றது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. வாத்துக்களுக்கு கூட சிவப்பு விளக்கு எரிந்தால் நின்றுவிட்டு.. பச்சை விளக்கு எரிந்த பின்னர் தான் கடக்க வேண்டும் என எப்படி தெரிந்திருக்கும் என நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.
வாத்துக்களுக்கு எப்படி..
மேலும் சிலர் வாத்துக்களின் இந்த செயல் மனிதர்களுக்கு சிறந்த பாடம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பலர் வாத்துக்களிடம் இருந்து நாம் போக்குவரத்து விதிகள் என்னவென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்... வாத்துக்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.