ஜனநாயகத்தையே இந்தியா அழித்துவிட்டதாம்.. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தால் குமுறும் பாகிஸ்தான்
வாஷிங்டன்: காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியா ஜனநாயகத்தை அழித்துவிட்டது என்றும், இந்த முடிவு ஒருதலைப்பட்சமானது மற்றும் சட்டவிரோதமானது என்றும் பாகிஸ்தான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.
இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, காஷ்மீரில் இந்தியா அடக்குமுறைகளை கையாண்டு வருவதாகவும் அபாண்டமாக பழிபோட்டு வருகிறது.
ஆபரேஷன் ஆக்டோபஸ்! அம்பலமானது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புகள்- நெருக்கடியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா!
காஷ்மீர் பிரச்சினை
பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தாலும் இந்த விவகாரத்தில் அடம் பிடிக்கும் பாகிஸ்தான் சர்வதேச மன்றங்களில் இந்த விவகாரத்தை எழுப்புவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் அவையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியுள்ளது. இதில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:-
பாகிஸ்தான் அமைதியை தான் விரும்புகிறது
பாகிஸ்தான் தனது அனைத்து அண்டை நாடுகளிடமும் அமைதியை மட்டுமே விரும்புகிறது. 1947- ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடன் 3 போர்களை பாகிஸ்தான் சந்தித்து உள்ளது. இந்த போர்களினால் இரு நாடுகளிடமும் வறுமை, வேலை வாய்ப்பு இன்மை அதிகரித்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனநாயகத்தை இந்தியா அழித்துவிட்டது. சட்டப்பிரிவு 370- ஐ ரத்து செய்யும் இந்தியாவின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது மற்றும் சட்ட விரோதமானது.
போர் தீர்வு ஆகாது
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நீடித்த நிலையான தீர்வு காணப்பட வேண்டும். எந்த பிரச்சினைகளுக்கும் போர் தீர்வு ஆகாது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அண்டை நாடான இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராகவே இருக்கிறேன்'' என்றார். ஆனால் ''காஷ்மீர் பிரச்சினைக்கு நியாயமான நேர்மையான தீர்வு ஏற்படுத்தும் வரை இது சாத்தியப்படாது'' என்று தெரிவித்திருந்தார்.
உண்மைக்கு புறம்பானது
இந்நிலையில் இது குறித்து ஐ.நா.வில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி மிஜிடோ வினிடோ, ''காஷ்மீர் பிரச்சினை தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு தவறானது. உண்மைக்குப் புறம்பானது. பாகிஸ்தான் தான் காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது. இந்த உன்னதமான அவையை இந்தியாவுக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க பாகிஸ்தான் பிரதமர் தேர்வு செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது.
வேடிக்கை அளிக்கிறது
உள்நாட்டில் நிலவும் குழப்பங்களை திசைத்திருப்ப முடியாததால் அவர் இவ்வாறு செய்துள்ளார். அமைதியை விரும்பும் தேசம் எதற்காக 1993-ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு துணை போன தாவூத் இப்ரஹிமுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். சொந்த நாட்டில் சிறுபான்மை உரிமையை நசுக்குபவர்கள் சர்வதேச அரங்கில் அது குறித்து பேசுவது வேடிக்கை அளிக்கிறது'' என்றார்.