செம ஷாக்... இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பரவிய.. மரபணு மாறிய கொரோனா.. ஏன் ஆபத்தானது?
வாஷிங்டன்: இந்தியாவில் முதலில் உறுதி செய்யப்பட்ட மரபணு மாறிய வைரஸ் பாதிப்பு தற்போது அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவின் கோர தாண்டவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய என உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாமல் இருப்பதே வைரஸ் பாதிப்பு அதிகரித்தற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல தடுப்பூசி பணிகளையும் அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் இந்திய வைரஸ்
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் முதலில் உறுதி செய்யப்பட்ட மரபணு மாறிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. double mutant strain என்று அழைக்கப்படும் இந்த குறிப்பிட்ட வகை கொரோனா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நோயாளி ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது.
double mutant strain என்றால் என்ன
இந்தக் குறிப்பிட்ட வகை கொரோனாவின் புரதத்தில் இரண்டு விதமான மாற்றங்கள் உள்ளது. இதனாலேயே இது double mutant strain என்று அழைக்கப்படுகிறது. இதுவரை பல உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், எந்த வகை கொரோனாவிலும் இரண்டு விதமான மாற்றங்கள் இருந்ததில்லை. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவில் இரண்டு மாற்றங்கள் உள்ளது என்றும் எனவே இதனால் அபத்து அதிகம் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் சின்-ஹாங் தெரிவித்துள்ளார்,
அமெரிக்க அரசு நடவடிக்கை
அமெரிக்காவில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த மரபணு மாறிய கொரோனா பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை அதிகரிக்க அந்நாட்டு அரசு தடுப்பூசி வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. தான் அதிபர் பதவியேற்று முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ள ஜோ பைடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குத் தினசரி கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.15 கோடியை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 906 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் உயிரிழப்பும் 5.70 லட்சமாக உயர்ந்துள்ளது.