சிறப்பான தடுப்பூசி பணிகள்.. அமெரிக்காவில் குறையும் கொரோனா.. வெறும் 4 மாதத்தில் சாதித்த அதிபர் பைடன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் தடுப்பூசி பணிகள் காரணமாகக் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், அங்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகிலேயே கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்தது. அமெரிக்காவில் தற்போது வரை 3.38 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல, அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் ஆறு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
குறையும் கொரோனா
கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் சராசரியாகத் தினசரி 30 ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதிக்குப் பிறகு வைரஸ் பாதிப்பு இந்தளவு குறைவது இதுவே முதல்முறையாகும். கொரோனா பரவல் தொடர்ந்து குறைவதால் அமெரிக்கா கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை ஏற்படுத்துகிறது
ஒவ்வொரு வாரமும் முந்தைய வாரத்தின் கொரோனா பாதிப்பைவிடத் தொடர்ந்து குறைந்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மையத்தின் இயக்குநர் ரோசெல் வலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். பைடன் நிர்வாகத்தின் மேற்கொள்ளப்பட்ட மிகச் சிறப்பான தடுப்பூசி பணிகள் இதற்கு முக்கிய காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி பணிகள்
அமெரிக்காவில் தற்போது 18+ மேற்பட்டவர்களில் சுமார் 60% பேர், குறைந்தபட்சம் தடுப்பூசியின் ஒரு டோஸை எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தச் சூழலில் அங்கு மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் மிகப் பெரியளவில் குறைந்துவிட்டது. இதைச் சமாளிக்கவும் பைடன் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதிய நடவடிக்கைகள்
தடுப்பூசி பணிகளை ஊக்குவிக்க பைடன் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டேட்டிங் தளங்களில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்குத் தனி பேட்ஜ் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு 5 மில்லியன் டாலர் லாட்டரியையும் ஓஹியோ, நியூயார்க், ஓரிகான் ஆகிய மாகாணங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம் தடுப்பூசி பணிகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உருமாறிய கொரோனா
அதேநேரம் அங்குப் பரவும் உருமாறிய கொரோனா வகைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக பாஸ்டன் கல்லூரி பொதுச் சுகாதார நிபுணர் டாக்டர் பிலிப் ஜே. லாண்ட்ரிகன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகையும் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தளர்வுகளில் அவசரம் வேண்டாம்
அமெரிக்காவில் பல மாகாணங்கள் மாஸ்க்குகள், தனிமனித இடைவெளியைப் பின்பற்றத் தேவையில்லை என அறிவித்துள்ளன. தடுப்பூசிகளின் 2 டோஸ்களை எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாகப் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், அமெரிக்காவில் மூன்றில் ஒருவருக்கு மட்டுமே தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதால் தளர்வுகளை அவசர கதியில் அறிவிக்க வேண்டாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.