ஓமிக்ரான்.. கோவிஷீல்டு உட்பட பழைய வேக்சின்கள் வேலை செய்யுமா? ஆகஸ்போர்ட் ஆய்வாளர்கள் முக்கிய விளக்கம்
வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக வேக்சின் வேலை செய்யுமா என்பது குறித்து ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.
Recommended Video
ஓமிக்ரான் உருமாறிய கொரோனா - கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது இந்த உருமாறிய கொரோனா தான். கடந்த காலங்களில் இதுபோன்ற உருமாறிய வைரஸ் தான் கொரோனா அலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் பெரும் அச்சத்தில் உள்ள உலக நாடுகள் ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன. இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே வெளிநாட்டினருக்குத் தடை விதிப்பதாக அறிவித்து விட்டன.
வெறும் 3 மணி நேரம்.. ஓமிக்ரான் கொரோனாவை துல்லியமாகக் கண்டறியலாம்.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
ஓமிக்ரான் கொரோனா
இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் அதிகப்படியான மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன
அதேநேரம் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த ஓமிக்ரான் கொரோனா தீவிர பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும், ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்த முக்கிய அறிகுறிகள் குறித்த தகவல்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மிகவும் சோர்வாக உணர்கின்றனர் என்றும் அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களின் உடலின் ஆக்சிஜன் அளவு பெரியளவில் குறையவில்லை எனக் குறிப்பிடுகின்றனர். முன்னதாக டெல்டா உருமாறிய கொரோனா வைரசால் இந்தியாவில் 2ஆம் அலை ஏற்பட்ட போது, பல நோயாளிகளின் உடலிலும் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்தது பெரும் சிக்கலாக உருவெடுத்தது.
ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள்
மேலும் இந்த உருமாறிய ஓமிக்ரான் கொரோனா பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருப்பதால் பழைய வேக்சின்களுக்கு எதிராக இது வேலை செய்யுமா என்பது குறித்த கேள்விகள் அதிகம் எழுந்துள்ளன. இது தொடர்பாக கோவிஷீல்டு வேக்சினை கண்டுபிடித்த ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் கூறுகையில், "இதுவரை ஓமிக்ரான் கொரோனா தொடர்பாக மிகவும் குறைவான தரவு நமக்குக் கிடைத்துள்ளது. இதனால் வேக்சினுக்கு கட்டுப்படுமா இல்லை என்பதை இப்போது கூற முடியாது.
வேக்சின் வேலை செய்யுமா
கடந்த ஆண்டில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றிய போதிலும், நமது தடுப்பூசிகள் தீவிர நோய்ப் பாதிப்பை ஏற்படுவதைப் பெரியளவில் தடுத்தது. இதனால் தற்போதுள்ள குறிப்பிட்ட தரவுகளை வைத்து வைத்துப் பார்க்கும்போது, ஓமிக்ரான் மட்டும் வேறுபட்டது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், தேவைப்பட்டால் புதிய வேக்சின் விரைவாக உருவாக்கப்படும். அதற்கான செயல்திட்டம் எங்களிடம் தயாராக உள்ளது" என்று கூறியுள்ளது.
மாடர்னா கூறுவது என்ன
அதேநேரம் கடந்த வாரம் மற்றொரு வேக்சின் நிறுவனமான மாடர்னா, உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக வேக்சின்கள் அதே அளவு பலனைத் தரும் வாய்ப்புகள் குறைவு என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள போதிலும், அது பெரியளவில் பயன்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்களின் தடுப்பூசியே கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு
இந்த ஓமிக்ரான் கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளது. இருப்பினும், இது மிகவும் புதிய உருமாறிய வைரஸ் என்பதால் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நமக்குத் தெளிவாகத் தெரியக் குறைந்தபட்சம் இன்னும் சில வாரங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது