H-1B விசா குழப்பத்திற்கு நடுவே.. அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் திடீர் சந்திப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா இந்தியா இடையேயான உறவு கடந்த சில காலமாகவே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் ஹெச்-1பி விசா கட்டணத்தை கூட டிரம்ப் அரசு உயர்த்தியிருந்தது. இதற்கிடையே இப்போது திடீரென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தியா அமெரிக்கா இடையே சமீப காலமாகவே உறவு மோசமாக மாறியிருக்கிறது. அதற்கு டிரம்ப் தான் பிரதானக் காரணம் எனச் சொல்லலாம். முதலில் இந்தியா மீது டிரம்ப் 50% வரிகளை விதித்தார். அதன் பிறகும் கூட இந்தியா குறித்து அவர் கூறும் கருத்துகள் வர்த்தக பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.

இந்தச் சூழலில் தான் திடீரென ஹெச்-1பி விசா கட்டணத்தையும் டிரம்ப் உயர்த்தினார். இந்தியர்களே ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் நிலையில், இது இந்தியாவையே அதிகம் பாதிப்பதாக இருக்கிறது. குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகளும் கூட பங்குச்சந்தையில் இன்று கடுமையாகச் சரிந்தது.
இந்தச் சூழலில், இப்போது திடீரென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார். ஐநா சபையின் 80வது கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ள நிலையில், அங்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜூலையில் வாஷிங்டனில் நடைபெற்ற 10வது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின்போது இரு தலைவர்களும் கடைசியாகச் சந்தித்தனர். அதன் பிறகு இப்போது தான் இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications