70 நாடுகளுக்கு தடை.. ஆனால் இந்தியாவுக்கு மட்டும் அனுமதி.. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு என்ன காரணம்
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. அதேநேரம் துருக்கி நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால், இந்தப் பட்டியலில் துருக்கியை அமெரிக்கா சேர்த்துள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய 2ஆம் அலை, ஏப்ரல் மே மாதங்களில் உச்சமடைந்தது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருந்தது.
தினசரி வைரஸ் பாதிப்பு இந்தியாவில் கட்டுக்கடங்காமல் அதிகமாக இருந்தது. டெல்டா கொரோனா இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தியாவுக்குத் தடை
இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்தியா உடனான தங்களின் விமான போக்குவரத்திற்குத் தடை விதித்தது. குறிப்பாக, இந்தியா உடனான போக்குவரத்திற்குக் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி முதல் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அதன்படி அமெரிக்கக் குடிமகன்களைத் தவிர, மற்றவர்கள் இந்தியாவிலிருந்து வரத் தடை விதிக்கப்பட்டது. 14 நாட்களில் ஒரு நாள் இந்தியாவில் இருந்திருந்தாலும், அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

புதிய அறிவிப்பு
சுமார் 4 மாதங்களாக இந்தத் தடை அமலிலிருந்தது. இந்தச் சூழலில் இந்தியாவில் தினசரி வைரஸ் பாதிப்பும் மெல்லக் குறையத் தொடங்கியது. ஒரு காலகட்டத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சமாக இருந்த நிலையில், இப்போது அது 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. மேலும், விமான பயணத்தில் லெவல் 4இல் இருந்து லெவல் 2க்கு இந்தியாவை மாற்றியமைத்துள்ளது.

தடை எங்கே
அதேநேரம் மறுபுறம் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அயர்லாந்து, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், பிரேசில் ஆகிய நாடுகளுக்குத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது துருக்கியும் புதிதாக இணைந்துள்ளது. இந்த நாடுகளிலிருந்து வரும் அமெரிக்கர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 70 நாடுகளிலிருந்து வருவோருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

டெல்டா கொரோனா பாதிப்பு
சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு அண்டை நாடான கனடாவுக்கு அமெரிக்கா தனது எல்லையைத் திறந்துள்ளது. 2 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்ட யார் வேண்டுமானாலும் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் அமெரிக்காவில் டெல்டா கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 60% பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் அளிக்கப்பட்டுள்ள போதிலும், டெல்டா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் வேக்சின் காரணமாகவே முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications